Skip to main content

அரசுப் பேருந்தில் ஏற்பட்ட திடீர் ஓட்டை; இழுத்துச் செல்லப்பட்ட பெண் பயணி

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
A sudden hole in a government bus; The female passenger who was dragged

சென்னையில் அரசுப் பேருந்தின் பின்புறத்தில் திடீரென ஏற்பட்ட துவாரத்தால் பெண் பயணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தில் பெண் பயணி ஒருவர் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்பொழுது திடீரென இருக்கையின் கீழே இருந்த பலகை உடைந்து ஒரு பெரிய ஓட்டை உருவானது. அதன் வழியே பெண் பயணி கீழே விழுந்தார்.

முழுதாக கீழே விழாமல் பேருந்தில் பெண் சிக்கிக்கொண்டார். பெண் பயணி விழுந்தது தெரியாமல் பேருந்து சிறிது தூரம் சென்றது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அப்பெண்ணை உடனடியாக மீட்டு அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.

பேருந்தில் ஏற்பட்ட இந்த உடைப்புக்கு பணிமனை பணியாளர்களின் அலட்சியமே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. பேருந்தில் பின்புறம் இருக்கையில் கீழே உள்ள பலகை சேதமடைந்து இருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். இது குறித்து பேசின் பிரிட்ஜ் பணிமனை கிளை மேலாளர் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காயமடைந்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தற்பொழுது வீடு திரும்பி இருப்பதாகவும் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்