விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஸ்ரீசுதர்ஸன் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு எச்சரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் கொடுத்துள்ளது.
இதற்கு முன்பாகவே தமிழகத்தில் குறிப்பாக விருதுநகர் சிவகாசி பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பட்டாசு ஆலைகளில் உரிய உரிமையைப் பெற்று செயல்படுகின்றனவா என ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் உரிய உரிமம் பெற்றுள்ளதா? தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அடுத்த 10 நாட்களுக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு உரிமையாளர்கள் மீது குண்டாஸ் பாயும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள ஜெயசீலன் விடுத்துள்ள எச்சரிக்கையில், 'விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் போர்மேன் மீது குண்டாஸ் பாயும். அனுமதி அளவை விட கூடுதலாக ரசாயனங்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு ஆலைகளை அனுமதியின்றி உள் வாடகை, குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகளை உள் வாடகைக்கு விடப்பட்டால் உரிமையாளர் மற்றும் குத்தகைதாரர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை விதிமீறல் குறித்து 9443967578 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம். விதிமீறலில் ஈடுபடும் தொழிற்சாலைகளை கண்டறிய நான்கு சிறப்பு ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.