Skip to main content

ரஜினி, ஜெயலலிதா படங்களுக்கு கதை எழுதிய மூத்த எழுத்தாளர் மகரிஷி மரணம்!

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

தமிழ் படைப்புலகத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரும், ரஜினிகாந்த், ஜெயலலிதா ஆகியோருடைய படங்களின் கதை ஆசிரியருமான மகரிஷி, நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.

சேலம் ஜான்சன்பேட்டை குறிஞ்சி அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் மகரிஷி. இவருடைய மனைவி பத்மாவதி. ஓய்வுபெற்ற நூலகர். இவர்களுக்கு ஸ்ரீவத்ஸன் என்ற மகனும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். கிருஷ்ணசாமி - மீனாட்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

 

story writer maharishi passed away


அந்தக்காலத்திலேயே எஸ்எஸ்எல்சி வரை படித்தவர். பின்பு, மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். பணியின் பொருட்டு தஞ்சையில் இருந்து சேலத்திற்கு 1950ம் ஆண்டு வாக்கில் குடிபெயர்ந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் பாலசுப்ரமணியம். ஆன்மிகம் மற்றும் எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்ட அவர், இரண்டுக்கும் தொடர்பு உள்ள வகையில் தனது பெயரை மகரிஷி என்று வைத்துக் கொண்டார். இலக்கிய உலகில் தனக்கென தனித்த அடையாளத்துடன் விளங்கினார்.

தமிழ் படைப்புலகில் அவருடைய சமகாலத்தில் வாழ்ந்த எந்த ஒரு நாவலாசிரியருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு மகரிஷிக்கு உண்டு. இவருடைய நாவல்கள்தான் அதிகளவில் தமிழில் படமாக்கப்பட்டு உள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றுக்கொடுத்த 'புவனா ஒரு கேள்விக்குறி' படம், மகரிஷியின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடைசியாக நடித்த 'நதியைத் தேடிவந்த கடல்' படத்தின் கதை ஆசிரியரும் இவரே என்பது தமி-ழ் எழுத்தாளர்கள் யாருக்கும் கிடைக்காத தனிச்சிறப்பு.

இவர் எழுதிய பனிமலை, என்னதான் முடிவு, பத்ரகாளி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வட்டத்துக்குள் சதுரம் ஆகிய நாவல்களும் அதே பெயர்களில் படமாக்கப்பட்டு உள்ளன. இதுவரை 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரைகள் உள்பட 22 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதிக் குவித்துள்ளார்.

 

story writer maharishi passed away

 

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு வீடு திரும்பியதும் எப்போதும்போல எழுத்துப்பணியில் ஈடுபட்டு வந்தார். நீண்ட காலமாக சேலம் ராஜா எக்ஸ்டென்ஷன் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த மகரிஷி, இரு ஆண்டுகளுக்கு முன்புதான் ஜான்சன் பேட்டையில் மகன் வசிக்கும் வீட்டுக்கு வந்தார்.

இந்நிலையில், நேற்று (செப். 27) இரவு வழக்கம்போல் இரவு உணவை முடித்துவிட்டு படுக்கைக்குச் சென்றார். இரவு 9 மணியளவில் மகரிஷிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடைய உயிர் பிரிந்தது.

இன்று காலையில்தான் அவர் மரணம் அடைந்த தகவல் பலருக்கும் தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முக்கிய பிரமுகர்கள், படைப்பாளிகள் அவருடைய உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஜான்சன்பேட்டையில் உள்ள மாநகராட்சி மின்மயானத்தில் மகரிஷியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

Next Story

எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Writer Devibharathi greeted the minister in person

ஒவ்வொரு வருடமும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த வருட விருது தமிழ் எழுத்தாளரான தேவிபாரதிக்கு அவர் எழுதிய ‘நீர்வழிபடூஉம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் அவருக்கு மத்திய அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பு சேர்க்கப்படுகிறது.

எழுத்தாளர் தேவிபாரதி சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள நொய்யல் நதிக்கரையில் இருக்கும் புது வெங்கரையாம்பாளையம் என்ற குக்கிராமத்தில்தான் அவர் வசித்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் தொலைப்பேசி மூலமும் பல எழுத்தாளர்கள், அவரின் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று தேவிபாரதியை வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை அவர் வசித்து வரும் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் தேவிபாரதியை தமிழக அரசின் சார்பாகவும் முதல்வர் சார்பாகவும் வாழ்த்தி கௌரவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார். சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதியை அமைச்சர் நேரில் சென்று வாழ்த்தியது அந்த கிராம மக்களையும், எழுத்தாளர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.