Skip to main content

சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஜெயராஜ் மனைவி, மகள்களிடம் விசாரணை!

Published on 12/07/2020 | Edited on 12/07/2020

 

sathankulam issues cbi officers investigation

சாத்தான்குளம் காவல் நிலையக் கொட்டடியில் போலீசாரால் முரட்டுத் தாக்குதலுக்குள்ளான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் அங்கிருந்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இரண்டு நாள் ரண, மரண வேதனையை அனுபவித்த தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. நீதிமன்றத்தின் உத்தரவுபடி ஐ.ஜி. சங்கர் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி.யினர் வேகமாக விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார்களைக் கைது செய்து கொலைவழக்குப் பதிவு செய்தனர்.

sathankulam issues cbi officers investigation

அதன்பின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுபடி, இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ.யின் டெல்லி டிடாட்ச்மெண்டின் ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா, இன்ஸ்பெக்டர்களான அனுராக் சின்கா, பூரண்குமார், எஸ்.ஐ.க்களான சுஷில்குமார் வர்மா, சச்சின், காவலர் அஜய்குமார் மற்றும் காவலர்கள் சைலேந்திரகுமார், குழுவினர் நேற்று (11/07/2020) தூத்துக்குடியிலுள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வழக்கின் ஆவணங்களைப் பெற்று ஆய்வு செய்தனர். சி.பி.சி.ஐ.டி.யின் சங்கர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் அருகிலுள்ள திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினர். 

sathankulam issues cbi officers investigation

எட்டுப் பேர்களடங்கிய சி.பி.ஐ.யினர் நேற்று (11/07/2020) காலை 11.00 மணிவாக்கில் அருகிலுள்ள சாத்தான்குளம் வந்தனர். அங்குள்ள ஜெயராஜின் வீட்டில் அவரது மனைவி மற்றும் மகள்களிடம் விசாரணை நடத்திவிட்டுப் பின்னர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகி அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; எஸ்.ஐ. ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Satankulam father son case SI Bail petition dismissed

 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் போலீஸ் எஸ்.ஐ.யின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

 

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமீன் வழங்கக் கோரி 5வது முறையாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும், வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ வாதத்தை முன் வைத்தது. மறைந்த ஜெயராஜின் மனைவி ஜெயராணி தரப்பிலும் எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால், நீதிபதிகள் ஜாமீன் மனுவை 5வது முறையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.