Skip to main content

சேலம் ராஜேஸ்வரி யானை உயிரிழந்தது; பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி

Published on 21/04/2018 | Edited on 21/04/2018
elephant

 

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த ராஜேஸ்வரி யானை உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தது. பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 18 வயது நிரம்பிய யானை கொண்டு வரப்பட்டது. அந்த யானைக்கு ராஜேஸ்வரி எனப் பெயரிட்டு பராமரித்து வந்தனர். கோயிலின் முன் பக்க மண்டபத்தில் கட்டப்பட்டு இருந்த ராஜேஸ்வரி யானை, பக்தர்களுக்கு தும்பிக்கையால் அருளாசி வழங்கி வந்தது.
 

கடந்த எட்டு ஆண்டுகளாக ராஜேஸ்வரி யானைக்கு உடல்நலமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாகவே அதன் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது. ஒரே இடத்திலேயே படுத்துக் கிடந்ததால் படுக்கைப் புண்களும் ஏற்பட்டது.
 

இதற்கிடையே சேலத்தைச் சேர்ந்த முரளிதரன் என்பவர், ராஜேஸ்வரி யானையை கருணைக்கொலை செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 16ம் தேதி, ராஜேஸ்வரி யானையை கருணைக் கொலை செய்யலாம் என்றும், இருப்பினும் அதன் உடல்நலம் குறித்த முழுமையான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.
 

இதையடுத்து, சென்னை மற்றும் நாமக்கல் கால்நடை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவப் பேராசிரியர்கள் ஜெயதங்கராஜ், விஜயகுமார், குமரேசன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு, யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். யானையின் முழு உடல்நல பரிசோதனை அறிக்கையையும் உயர்நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்தனர்.
 

தொடர்ந்து 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியும் யானையின் உடல்நலம் குறித்து நேரடியாக கண்காணித்து வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (21/4/2018) பிற்பகல் 12.30 மணியளவில் ராஜேஸ்வரி யானை உயிரிழந்தது. தற்போது அந்த
 யானைக்கு 43 வயதாகிறது.
 

elephant


இதுகுறித்து தகவல் பரவியதும் பக்தர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து ராஜேஸ்வரி யானைக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். ஆட்சியர் ரோகிணியும் யானையின் சடலத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது துயரம் தாளாமல் அவரும் கண் கலங்கினார்.
 

உரிய ஆகம விதிகள், சடங்குகளின்படி இன்று மாலை ராஜேஸ்வரி யானை சடலம் சேலம் கோரிமேடு ஆத்துக்காடு நந்தவனம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்படும் என்று சுகவனேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

பாதுகாப்பு கருதி, சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை தலைமையில் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
 

இதற்கிடையே, கடந்த சில நாள்களாக உடல்நலம் தேறிய நிலையில் திடீரென்று யானை இன்று இறந்ததால் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சிலர் புகார் கூறினர். யானையை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சிலர் குரல் எழுப்பியதால், திடீர் சலசலப்புகள் எழுந்தன.
 

ராஜேஸ்வரி யானை இறந்ததை அடுத்து, சேலம் சுகவனேஸ்வரர் கோயில் நடை இன்று சாத்தப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு பலகையும், நிர்வாகம் சார்பில் கோயிலின் நு-ழைவு வாயில் முன்பு வைக்கப்பட்டு உள்ளது.
 

கடந்த 25 ஆண்டுகளாக அருளாசி வழங்கி வந்த ராஜேஸ்வரி யானை இறந்தது, பக்தர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்