
கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(35). இவருக்கு திருப்பூரை சேர்ந்த மகேஸ்வரி(33) என்ற பெண்ணிற்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் குமார் தனது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மகேஸ்வரி திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இறையில் அடைத்தனர். கடந்த 4 மாதங்களாக சிறையில் இருந்த குமார் நேற்று பிணையில் வெளியே வந்துள்ளார். அதன்பின் தனது மனைவி மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்ற குமார், நான் திருந்திவிட்டேன் என்னை மன்னித்துவிடு. இனி ஒழுக்கமாக வாழ்கிறேன் என்று கூறி தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்துள்ளார். ஆனால் இதற்கு மகேஸ்வரி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குமார் வீட்டில் இருந்த அருவாமணையை எடுத்து மகேஸ்வரியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மகேஸ்வரி சரிந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மகேஸ்வரியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மனைவியை கொன்றுவிட்டதாக நினைத்த குமார் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாமீன் வெளியே வந்து மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற கணவரின் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.