
தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை அறிவித்திருந்தது. திமுக சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம் மற்றும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அதிமுக கூட்டணியில் இன்பதுரை, தனபால் களமிறக்கப்பட்டனர். அந்த வகையில் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி ஆனதையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது கமல்ஹாசனை பார்க்க வந்தவர்கள் பல்வேறு பரிசுப்பொருட்களை கொண்டுவந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் வாள் ஒன்றை கொண்டுவந்து மேடையில் கமல்ஹாசனிடம் கொடுக்க முயன்றார். ஆனால் கமல்ஹாசன் அதை வாங்க மறுத்தார். விடாமல் அந்த ரசிகர் கமலின் கையில் வாளை திணித்த நிலையில் வாளை கீழே வைக்கும்படி கமல்ஹாசன் கடிந்துகொண்டார். அங்கிருந்தவர்கள் மற்றும் போலீசார் மேடைக்கு ஓடிவந்து வாளை வாங்கி கீழே போட்டனர். கமல் ரசிகரிடம் ஆத்திரம் கொண்ட இந்த சம்பவத்தால் அங்கு சிறிய பதற்றம் நிலவியது.