Skip to main content

‘இறந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்’-எம்.எல்.ஏ. சின்னத்துரை கோரிக்கை!

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

Rs 1 crore relief should be given to the family of a boy

 

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பயிற்சியின் போது வெடித்த சில குண்டுகள் சிதறியுள்ளன. அப்போது கொத்தமங்கலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி (11) என்ற 6ம் வகுப்பு படித்த மாணவன் நார்த்தாமலையில் உள்ள தாத்தா முத்து வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று மாணவன் தலையில் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு துளைத்து மயங்கிய நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்நிலையில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று மாணவனை பார்த்து பெற்றோருக்கு ஆறுதல் கூறி தற்காலிக நிவாரணம் நிதியாக ரூ.1 லட்சம் வழங்கிச் சென்றார். அதே போல் நேற்று மாலை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் வெளியான நிலையில் நார்த்தாமலை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் திருச்சி மண்டலத்தில் இருந்து 5 மாவட்ட போலீசார் பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

 

Rs 1 crore relief should be given to the family of a boy

 

இந்த நிலையில் சிறுவன் காயமடைந்தது முதல் தொடர்ந்து சிறுவனுக்காக மருத்துவமனையில் காத்திருந்து ஆட்சியர்வரை பேசியிருந்த கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. (சிபிஎம்) சின்னத்துரை சிறுவன் இறந்த தகவல் அறிந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரைப் பார்த்து கதறி அழுத பெற்றோரைத் தேற்ற முடியாமல் எம்எல்ஏ கண்ணீர் வடித்தார். அதே போல் இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, பெற்றோர் தங்குவதற்கு வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை  தர வேண்டும். இந்தச் சம்பவம் குறித்து நீதிவிசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.