Skip to main content

3 நாட்களாக சிக்கித் தவித்த ரயில் பயணிகள் மீட்பு!

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Rescue of stranded train passengers for 3 days

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து நேற்று முன்தினம் சென்னை எழும்பூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அப்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான இரயில்வே பாலம் முழுவதும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாகச் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ரயிலில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதியடைந்தனர். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

அதே சமயம் ரயிலில் உள்ள பயணிகளை மீட்கும் பணி குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலமாக ஆய்வு செய்தார். அப்போது தொலைப்பேசி வாயிலாக அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார். நிலைமையை ஆய்வு செய்து, மீட்புப் பணியை துரிதப்படுத்த தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். அப்போது மத்திய இணையமைச்சர் எல். முருகனும் உடன் இருந்தார்.

இந்நிலையில் வெள்ளத்தால் 3 நாட்கள் ரயிலில் சிக்கியிருந்த ரயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். 6 பேருந்துகள் மூலம் 400க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பாதிக்கப்பட்ட ரயில் பயணிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து மற்றொரு ரயில் மூலம் பயணிகள் மதுரை செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A snake that entered the train; Tragedy befell the young man


கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.

தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.