Skip to main content

‘என்னை காப்பாற்றியவர் விஜயகாந்த் தான்..’ - கலங்கிய ரஜினி 

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Rajini said fervently that it was Vijayakanth who saved me

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கான தொடண்டர்கள் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். 

Rajini said fervently that it was Vijayakanth who saved me

இந்த நிலையில் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசிய போது, “நான் இப்போதுதான் கன்னியாகுமரியில் இருந்து வருகிறேன்; நேற்றே வரவேண்டியது, முடியாமல் போய்விட்டது. விஜயகாந்த் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும் என்றால் நட்புதான்; நட்புக்கு இலக்கணமாக இருந்தவர் விஜயகாந்த். அவருடன் ஒருமுறை பழகிவிட்டால் வாழ்கை முழுவதும் நம்மால் மறக்கவே முடியாது. அன்புக்கு அடிமை என்று சொல்வார்கள்; அதனால்தான் விஜயகாந்திற்கு அதிக நண்பர்கள்; அவருக்காக உயிரை கொடுக்கும் அளவுக்கு இருந்தார்கள்; இருக்கிறார்கள். நண்பர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீது கோபப்படுவார். ஆனால் யாருக்கும் அவர்மீது கோபம் வராது. ஏனென்றால், விஜயகாந்தின் கோபத்தில் நியாயம் இருக்கும். அன்பு இருக்கும், சுயநலம் இருக்காது. தைரியத்திற்கும் வீரத்திற்கும் இலக்கணமானவர்.

எனக்கு உடல்நிலை சரியில்லாத போது ராமச்சந்திரா மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். அப்போது நிறைய மக்கள், பத்திரிகையாளர்கள் கூட்டம் அதிகமாக திரண்ட நிலையில் ஒன்றுமே செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் விஜயகாந்த் என்ன செய்தார் என்று தெரியவில்லை, எல்லாரையும் பேசி அனுப்பி வைத்து விட்டு எங்கள் வீட்டாரிடம், அண்ணனோட ரூம் பக்கத்தில் எனக்கும் ஒரு ரூம்போடுங்க நான் பாத்துகிறேன் அண்ணன என்று கூறியுள்ளார். அது என்னால் மறக்கவே முடியாது என்று கனத்த இதயத்துடன் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் சங்கத்தில் இருந்து சிங்கப்பூர் மலேசியா கலைநிகழ்ச்சிக்காக சென்றிருந்தோம். நிகழ்ச்சி எல்லாம் முடித்துவிட்டு வரும்போது மற்ற கலைஞர்கள் அனைவரும் பஸ்ஸில் ஏறிவிட்டனர். நான் வரும்போது நேரமாகிவிட்டது. ரசிகர்கள் எல்லாம் என்னை சூழ்ந்துவிட்டார்கள்; 5 நிமிடத்திற்கு என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை; கூட இருக்க பவுன்ஸர்களாலும் கூட ஒன்றுமே செய்யமுடியாமல் திண்டாடினார்கள். அதையெல்லாம் பஸ்ஸில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த விஜயகாந்த், கூட்டத்திற்குள்ளே வந்து அவரது தோளில் இருக்கும் துண்டை வைத்து எல்லாரையும் அடித்து விரட்டி, என்னை மீட்டு பூ மாதிரி கொண்டுவந்து பஸ்ஸில் உட்காரவைத்து அண்ணா உங்களுக்கு ஒன்னுமில்லையே என்று கேட்டார். அந்தமாதிரி இருந்த ஒரு ஆள கடைசி நேரத்தில் இப்படி பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. 71 பால்தான், அதுக்குள்ள பல சிக்ஸர்கள், பல ஃபோர்கள் அடித்து நூற்றுக்கணக்கான ரன்களை குவித்து, மக்களை மகிழ்வித்து தற்போது விக்கெட்டை இழந்துவிட்டு உலகம் என்கிற ஃபீல்டை விட்டு போய்ட்டார். கேப்டன் என்பது பொருத்தமான பெயர். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்கள் மனதில் யார்? விஜயகாந்த் தான். வாழ்க விஜயகாந்த்!” என்று மிகுந்த வருத்தத்துடன் பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.