Skip to main content

தீவிரமான தனிப்பட்ட விமர்சனங்களை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்! – உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Published on 10/12/2020 | Edited on 11/12/2020

 

 Political leaders should avoid serious personal criticism! - High Court Instruction!

 

அரசியல் கட்சித் தலைவர்கள், தீவிரமான தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

 

தமிழக முதல்வராக  ஜெயலலிதா இருந்தபோது, அவரைப் பற்றியும், தமிழக அரசு குறித்தும், திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் குறித்து, தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின், தனித்தனி வழக்குகள் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

 

இந்நிலையில், அந்த வழக்குகளில் 12 வழக்குகள்,  நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமரேசன், ‘அரசு மற்றும் முதல்வருக்கு எதிரான கருத்துகள் அனைத்தும் விமர்சனம்தானே தவிர, அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக்கூடியவை அல்ல. மேலும், இந்த 12 வழக்குகளில் 3 வழக்குகளுக்கான அரசாணைகளை, உயர் நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துவிட்டது.’ எனத் தெரிவித்தார்.  

 

அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, அந்த 3 அரசாணைகள் ரத்து செய்யப்பட்டதே தவறு என்பதால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், தனிப்பட்ட முறையிலும் ஸ்டாலின் பேசியதாலேயே அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.’ என்று வாதிட்டார்.

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட மூன்று அவதூறு வழக்குகளையும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்த ஒரு அவதூறு வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

‘பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு, விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும். அதேசமயம், விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்பாக,  தங்கள் பொறுப்பை உணர்ந்து கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களாக இருந்தாலும்,  தீவிரமான தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். அதேபோல, தங்கள் ஆளுமையை, தங்களின் செயல்பாடுகளில் வெளிப்படுத்தி முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மேலும், வலுவான குற்றச்சாட்டோ அல்லது உரிய ஆதாரமோ இல்லாமல், அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யும் கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும்.’  என நீதிபதி அறிவுறுத்தினார்.

 

cnc

 

‘கடந்த முறை பெருவெள்ளத்தில் ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துக்கொண்டதால்தான், இந்த ஆண்டு பெய்துள்ள கூடுதல் மழையால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பிய நிலையில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம், தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.’ எனப் பாராட்டினார்.

 

இதையடுத்து, ஸ்டாலின் தொடர்ந்த மற்ற வழக்குகளின் விசாரணையை,  டிசம்பர் 14 -ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.