Skip to main content

"ரஜினி ரசிகர்கள் அ.தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள்!" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி!!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

 Rajini fans will vote for AIADMK! - Minister Rajendrapalaji interview !!

 

பழனிமலை முருகன் கோயிலுக்கு வந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ரோப் காரில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

 

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ''பழனியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர் முருகனை தான் அனைவரும் வழிபடுகின்றனர். இனிமேல் வருபவர்களும் அதே முருகனை தான் வழிபடப் போகிறார்கள். இதுபோல அரசியலுக்கு வருபவர்கள் எம்.ஜி.ஆர் பெயரை கூறினால் வாக்குகள் கிடைத்துவிடும் என நம்புகின்றனர். ஆனால் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட ஆட்சியை அதிமுக சிறப்பாக நடத்தி வருகிறது. எனவே எம்.ஜி.ஆருக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் அதிமுகவினர் மட்டுமே. கூட்டணியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டது. எனவே அவர்தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார்.

 

நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை எந்தவித ஒளிவுமறைவின்றி தெரிவித்து, அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார். அவர் நீண்ட நாட்கள் நோய்நொடியின்றி இருந்து கலையுலகில் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ரஜினிகாந்த் விரும்பியது ஆன்மிக அரசியல்தான். அந்த அரசியலைத்தான் அதிமுக நடத்தி வருகிறது. திமுகவில் இருப்பவர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது எனவே ஆன்மிக அரசியலை விரும்பும் ரஜினியின் ரசிகர்களும் அதிமுகவுக்குதான் வாக்களிப்பார்கள்.

 

முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் மீது ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டுகளை அளித்துள்ளார். திமுகவில் உள்ளவர்கள் பலதலைமுறைக்கு சொத்துச் சேர்த்து வைத்துள்ளனர். தங்களால் இந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியாவிட்டால் அந்தச் சொத்துக்களை காப்பாற்ற முடியாது என்பதால் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகின்றனர். வருகிற தேர்தலில் திமுகவுக்கு சம்மட்டி அடி கொடுத்து மக்கள் தோல்வி அடையச் செய்வார்கள். எத்தனை ஊழல் புகார் கூறினாலும் உண்மை உறங்காது.

 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தூய்மையான ஆட்சி மீண்டும் அமைப்பது உறுதி. தமிழகத்தில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2,500 ரூபாய் பணத்துடன் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல ஒரு பண்டிகைக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது கிடையாது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத மு.க.ஸ்டாலின் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்'' என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.