Skip to main content

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு வலைவிரித்த போலீஸ் எஸ்ஐ! கணவரை தாக்கிய வழக்கில் திடீர் இடமாற்றம்!!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018
police

 

சேலத்தில், குடும்பத்தகராறு தொடர்பாக புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு காதல் வலைவிரித்த போலீஸ் எஸ்ஐ, பெண்ணின் கணவரை தாக்கி சிறை வைத்த புகாரின்பேரில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.


சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் மலைவாசன். வெள்ளிப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மணிமேகலை. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

 

police si

 

இது தொடர்பாக மணிமேகலை பலமுறை அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குடும்பம் என்றால் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படுவது சகஜம் என்றுகூறி போலீசாரும் பலமுறை அவர்களை அழைத்து சமாதானம் செய்து வைத்துள்ளனர். 

 


ஆனால், அடிக்கடி கணவர் மீது புகார் கொடுக்கச் சென்று வந்ததில், மணிமேகலைக்கும் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வரும் கலைசெல்வன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மணிமேகலை புகார் கொடுத்தால், அந்தப் புகார் மீது தானாகவே முன்வந்து கலைசெல்வன் விசாரணை நடத்துவதுபோல் அவருடன் சிரித்துப் பேசி பழகி வந்துள்ளார்.

 


புகார்தாரர் - போலீஸ்காரர் என்ற உறவைத் தாண்டியும், அவர்கள் இருவரும் 'நெருக்கமாக' பழக ஆரம்பித்தனர். இதுகுறித்து அறிந்த மணிமேகலையின் கணவர் மலைவாசன், மனைவியைக் கண்டித்துள்ளார். மனைவியுடனான தொடர்பை விட்டுவிடுமாறு எஸ்ஐயையும் கண்டித்ததுடன், இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் செய்து விடுவதாகவும் மலைவாசன் கூறியுள்ளார்.

 


இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும், மலைவாசனை வீட்டை விட்டு விரட்டி அடித்தனர். கடந்த சில மாதங்களாக மலைவாசன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். கணவர் இல்லாததால், எஸ்ஐ கலைசெல்வன் அடிக்கடி மணிமேகலை வீட்டிற்கே வந்து அவருடன் 'நெருக்கமாக' இருந்துவிட்டுச் சென்று வந்துள்ளார்.

 


இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு, மணிமேகலை வீட்டிற்கு வந்த எஸ்ஐ கலைசெல்வன் வீட்டில் இருந்த மணிமேகலையின் மகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், தன் தந்தை மலைவாசனிடம் கூறினார். ஆத்திரம் அடைந்த மலைவாசன், மணிமேகலையின் வீட்டிற்கு இன்று (அக்டோபர் 9, 2018) வந்தார். அப்போது எஸ்ஐ கலைசெல்வனும் அங்கு இருந்துள்ளார். மகளை தாக்கியது குறித்து தன் மனைவியிடமும், எஸ்ஐயிடமும் கேட்டுள்ளார். 

 


இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்ஐ கலைசெல்வன், மலைவாசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் அடைந்தார். மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டுக்குள்ளேயே ஒரு அறையில் சிறை வைத்தனர். 

 


அவர் ஜன்னல் பக்கமாக எட்டிப்பார்த்து தன்னைக் காப்பாற்றும்படி கூச்சல் போட்டார். அதையறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டனர். அப்போது வீட்டுக்கு வெளியே எஸ்ஐ கலைசெல்வனும், மலைவாசனும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டனர். பொதுமக்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். மேலும், காயம் அடைந்திருந்த மலைவாசனை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 


மலைவாசன் அளித்த புகாரின்பேரில், அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், எஸ்ஐ கலைசெல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இதற்கிடையே, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், அதிரடியாக எஸ்ஐ கலைசெல்வனை அன்னதானப்பட்டியில் இருந்து வீராணம் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.