Skip to main content

'தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும்'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

'Pay homage to idols of leaders'   Chief Minister MK Stalin's order!

 

நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு சுதந்திர தினம மற்றும் குடியரசுத் தின விழா நாட்களில் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்திய திருநாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகியோரின் தியாகங்களைப் போற்றிப் பாராட்டி, பெருமைப்படுத்துகின்ற வகையில், அரசின் சார்பில் அந்த தியாக சீலர்களுக்கு நகரின் முக்கிய பகுதிகளில் சிலைகளும் அவர்களின் நினைவினைப் போற்றுகின்ற வகையில் வாழ்ந்து மறைந்த வீடுகள் நினைவு இல்லங்களாகவும், நினைவு மண்டபங்களும், நினைவுத் தூண்களும் அரசின் சார்பில் அமைக்கப்பட்டு, உரிய முறையில் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. 

 

மேலும், அப்பெருமக்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களானது செய்தித் துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் கலைப் பண்பாட்டு துறை ஆகிய துறைகள் வாயிலாக அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவ்விழாக்களில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், மக்கள் பிரதிநிதிகள், உயர் அலுவலர்கள், அத்தலைவர்களின் வாரிசுத்தாரர்களும் பங்கேற்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திடும் நடைமுறை ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, நூறாண்டு கடந்த தலைவர்களின் தியாகங்களை அருமை பெருமைகளை இன்றைய இளம் தலைமுறையினரும் அறிந்து கொள்ளுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் நூற்றாண்டு விழாக்களும் சிறப்புடன் கொண்டாடப்பட்டும் வருகின்றன. 

 

அதேபோல, நம்நாடு விடுதலை பெற தன்னை அர்ப்பணித்ததோடு தமது இன்னுயிரையும் தந்திட்ட பெருந்தலைவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாவின் போதும் சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்