Skip to main content

கைக்குழந்தைகளை வைத்து பிச்சை; 34 குழந்தைகள் மீட்பு

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Begging with infants; 34 Child Rescue

 

அண்மையில் திருச்சி அம்மா மண்டபத்தில் கோவில் முன்பு குழந்தைகளைக் கையில் வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கும் பெண்கள் மீது பொதுமக்கள் புகார் கொடுத்ததால் போலீசாரைக் கண்டதும் பெண்கள் குழந்தைகளுடன் ஓட்டம் எடுத்த சம்பவம் நிகழ்ந்திருந்தது.

 

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் முழுவதும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார்கள் எழுந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடுத்த உத்தரவின் பேரில் 28 குழுக்கள் அமைக்கப்பட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சிக்னல்கள் உள்ளிட்ட இடங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் கண்காணிக்கப்பட்டு பிடிக்கப்பட்டனர்.

 

Begging with infants; 34 Child Rescue

 

இதில் பிடிபட்ட பெண்களில் பல பெண்கள் குழந்தைகளின் உண்மை பெற்றோராக இருந்தாலும் சில பெண்கள் பெற்றோர் அல்லாதவர்களாகவும் இருந்தனர். இதனால் அவர்கள் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுத்து வந்தார்களா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது வரை போலீசார் 18 பெண்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு, விசாரணையின் அடிப்படையில் அவர்களிடம் பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்திய 34 கைக்குழந்தைகளை மீட்டுள்ளனர்.

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் குறட்டைக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா? - மயக்க மருந்து நிபுணர் கல்பனா விளக்கம்!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Dr Kalpana | Snoring | Child |

 

குறட்டையால் பாதிக்கப்படுகிற குழந்தைகளை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் என்ன நடக்கும், குறட்டையால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும் போது, மயக்கமருந்து நிபுணர்களின் அவசியம் குறித்து மயக்கவியல் நிபுணர் டாக்டர் கல்பனா நமக்கு விளக்குகிறார்.

 

குறட்டை பிரச்சனையால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இரவில் குறட்டை விடுகிற குழந்தைகளுக்கு பல பிரச்சனைகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதை சரியாக கவனிக்க வேண்டும். 

 

ஒரு குழந்தை தூங்கும் போது குறட்டை விடுகிறாள் அவளுக்கு எதாவது மருந்து கொடுங்கள் என்று மருத்துவரை அணுகியிருக்கிறார். குழந்தையை நேரில் பார்க்காமல் மருந்து கொடுக்க இயலாது. நேரில் அழைத்து வாருங்கள் என்று வரச்சொல்லி பரிசோதித்தால் மூக்கின் உட்புறத்தில் இயல்பான அளவை விட அதிகமாக சதை வளர்ந்திருக்கிறது. குழந்தைகளுக்கு அரிதாக வரக்கூடிய பிரச்சனையாகும். 

 

13 வயது குழந்தை பல நாட்களாக வாயில் தான் மூச்சு விட்டு இருந்திருக்கிறாள். யாருமே இதை கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள். பிறகு அறுவை சிகிச்சையின் மூலம் தான் இதை சரி செய்ய முடியும் என்றும், அதற்கு முன் மயக்கமருந்து கொடுப்பதற்கு நிபுணரை அணுகினர். மயக்க மருந்து நிபுணர்கள் பரிசோதித்து அறுவை சிகிச்சையின் போது வலி ஏற்படாமல் இருப்பதற்கும், இதய துடிப்பின் அளவினை பரிசோதித்தும் மயக்க மருந்து அளவு எடுத்து கொடுப்பார்கள். 

 

இந்த குழந்தைக்கு முழு மயக்க மருந்து தேவைப்பட்டது. குழந்தையை முழுமையான மயக்க நிலைக்கு கொண்டு போய் அறுவை சிகிச்சை செய்தனர், இரண்டு மூக்கு துவாரத்திலும் சதை வளர்ந்திருந்தது. அதை நீக்கி அறுவை சிகிச்சை செய்தனர். சில நாட்களுக்குப் பிறகு தன்னால் மூக்கின் வழியாக சுவாசிக்க முடிகிறது என்று மகிழ்ச்சியோடு அந்த குழந்தை சொன்னது.

 

சில சமயம் குறட்டைக்கு உடற்பருமன் காரணமாக சொல்லப்படும். ஆனால் சில குழந்தைகள் ஒல்லியாக இருப்பார்கள், அவர்களும் குறட்டை விடுவார்கள், தூங்கும் போது சுவாசிக்க உகந்தவாறு படுத்து இருக்க வேண்டும், அப்போது குறட்டையிலிருந்து விடுதலை அடையலாம். எல்லா விதமான குறட்டைக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு குறட்டையின் தன்மை தீவிரம் அடைந்த பிறகு மருத்துவரை அணுகும் போது நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை தேவையா அல்லது வெறும் மருந்து மாத்திரையால் குணப்படுத்தி விடலாமா என்பது பரிசீலிக்கப்படும். 

 

 


 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

350 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு; வேளாண்துறை அமைச்சர் பங்கேற்பு

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 mrk panneerselvam participated in a community baby shower for 350 pregnant women

 

சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

 

விழாவில் ஒருங்கிணைந்த திட்ட வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் த.பழனி வரவேற்றார். சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்துப் பேசினார். 

 

விழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து 350 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை உள்ளிட்ட சீர்வரிசை மற்றும் தலா ஊக்கத் தொகை ரூ.500 வழங்கி சிறப்புரையாற்றி பேசுகையில், “குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பது அல்லது வயதிற்கேற்ற உயரத்துடன் வளர்ச்சி இல்லாமல் இருப்பது போன்றவற்றை நாம் கவனிக்காமல் விட்டால் எதிர்காலத்தில் அவர்கள் ஆரோக்கிய குறைபாட்டுடன் வேலை செய்யும் திறன் குறைந்தவர்காளாக இருப்பார்கள்.

 

 mrk panneerselvam participated in a community baby shower for 350 pregnant women

 

இதனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நலத்திட்டங்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கி வருகிறது. சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு கர்ப்பிணி தாயும் ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறை. ஊட்டச்சத்து உணவு முறை, மருத்துவ பரிசோதனைகளின் அவசியத்தை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

ஏழை எளிய பெண்கள் தங்களுக்கு வளைகாப்பு நடத்துவதற்கான வசதிகள் இல்லாத நிலையில் கவலை கொள்ளக்கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசு தாயுள்ளத்தோடு ஒவ்வொரு ஆண்டும் வளைகாப்பு விழா நடத்துகிறது. இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 1400 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

 

விழாவில் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் ம. சிந்தனைசெல்வன், சிதம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் எம். முத்துக்குமார், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் ஹிரியன் ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். விழாவில் பொதுக்குழு உறுப்பினர் கே.பி.ஆர். பாலமுருகன், கடலூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் த. ஜேம்ஸ் விஜயராகவன், நகரமன்ற உறுப்பினர்கள் அப்பு சந்திரசேகரன், ஏ.ஆர்.சி. மணிகண்டன், லதா, கல்பனா, மாவட்ட பிரதிநிதி வி.என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, நகர துணைச் செயலாளர் பா. பாலசுப்பிரமணியன், ஆர். இளங்கோ, இளைஞரணி மக்கள் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீரப்பாளையம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கோ. செல்வமணி நன்றி கூறினார். விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு வடை பாயசத்துடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்