
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 431 பயனாளிகளுக்குக் கலைஞரின் கனவு இல்லத்திற்கான ஆணை வழங்கும் விழா ஜெய்னி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், உதவி ஆட்சியர் வினோதினி, கோட்டாட்சியர் சக்திவேல், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி வரவேற்றுப் பேசினார்.
இவ்விழாவில் 431 பயனாளிகளுக்குக் கலைஞரின் கனவு இல்ல திட்டப் பணிக்கான ஆணையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வழங்கினார். அதன்பின் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில்,“இந்தியாவிலேயே வரலாறு காணாத அளவிற்குத் தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் 8 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்திற்கான இதுவரை 1 லட்சம் பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஆத்தூர் ஒன்றியத்தில் மட்டும் 431 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் வீடுகள் இல்லாதவர் யாருமில்லை என்ற நிலை உருவாகி வருகிறது. அதற்குக் காரணம் மக்களுக்கான மக்களாட்சி செய்து வரும் திராவிட மாடல் ஆட்சி நாயகன் முதல்வர் மு.க. ஸ்டாலின். எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. அனைத்து நலத்திட்டங்களும் இல்லம் தேடிச் செல்கிறது. கிராமப்புற சாலைகள் மேம்பட்டு வருவதால் போக்குவரத்து மட்டுமின்றி கிராமங்களில் உள்ளவருக்கு அனைத்து வசதியும் கிடைத்து வருகிறது.

பிரதம மந்திரி மேம்பாட்டுச் சாலை ஒரு சில இடங்களில் சேதமடைந்துள்ளது. அவற்றையும் சரிசெய்ய உத்தரவிடப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் நடைபெற உள்ளது. இது தவிர மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் அருகில் உள்ள கட்சி நிர்வாகிகளிடமோ உள்ளாட்சி பிரதிநிதியிடமோ மனுக்களைக் கொடுங்கள். அவர்கள் மூலம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு சென்று விரைவில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்” என்று கூறினார்.