
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணியானது கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் ராமாபுரத்தில் உள்ள மெட்ரோ ரயிலுக்கான மேம்பாலம் கட்டுமான பணியின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது மேம்பாலத்தின் தூண்களுக்கு இடையே வைக்கக்கூடிய 2 குறுக்கு தூண்கள் சரிந்து விழுந்துள்ளன. இந்த தூண்கள் ஏறக்குறைய 50 முதல் 100 டன் எடை கொண்டவை ஆகும்.
இந்த தூணானது திடீரென சாலையில் சரிந்து விழுந்த போது சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் மேலும் சிலர் இதில் சிக்கி இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த விபத்து ஏற்பட்ட பகுதியை காவல்துறையினர். பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இடிந்து விழுந்த தூண்கள் 50 டன்னில் இருந்து 100 டன் வரை எடை கொண்ட இருப்பதன் காரணமாக இதற்காக பிரத்தியேக கிரைன்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
விபத்துக்குக் காரணமான 2 தூண்களையும் அப்புறப்படுத்தினால் தான் உள்ளே வேறு யாரும் சிக்கி இருக்கிறார்களா? தெரியவரும் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்ட இரு வாகனங்கள் சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் இணைப்பு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.