Skip to main content

கல்வியை காவிமயமாக்கும் பா.ஜ.கவின் திட்டத்திற்கு தமிழக அரசு துணை போகிறது - ஆசிரியர் மன்றம் மீனாட்சிசுந்தரம்

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழக அரசு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்குமாறு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி , அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் பெறுமாறு மத்திய அரசை தமிழக அரசு வேண்டியது.

  ஆனால் மத்திய அரசு அதனை ஏற்காதது மட்டுமல்லாமல் அவ்வாறு அனுப்பப்பட்டத் தீர்மானம் எங்கே இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மிகவும் அலட்சியத்தோடு பதிலளித்தார். 

 

g


தமிழக அரசு மாநில உரிமையைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் அந்த பிரச்சினையில் தோல்வியைத் தழுவியது. அதன் காரணமாக தமிழக மாணவிகள் அரியலூர் அனிதா, பட்டுக்கோட்டை வைசியா, திருப்பூர் மாவட்டம் வில்லியங்காட்டைச் சேர்ந்த ரித்தூஸ்ரீ  உள்ளிட்ட நான்கு பேர் பலியானார்கள்.  

 

இதற்காக தமிழக அரசோ, மத்திய அரசோ கவலைப்பட்டதாக தெரியவில்லை. மத்திய அரசு சர்வாதிகாரமாக நீட் தேர்வு நடத்திக் கொண்டிருப்பதை சுயநலம் கருதி தமிழக அரசும், முதலமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.

 


தற்போது மத்திய அரசு கல்வியை காவிமயமாக்கும் நோக்கோடு  மிக மிக அவசரமாக புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து அமலாக்குவதற்கு துடிக்கிறது. புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் மாநில மொழிகள் சிதையும். அம்மொழிகளுக்குரிய கலாச்சாரம், பண்பாடு அனைத்தும் ஒழிக்கப்படும். 

 

ஒரே கடவுள் அவர் இராமர், ஒரே நாடு அது இந்தியா, அது இந்துத்துவா நாடு, ஒரே மொழி அது இந்தி என்ற ஆர்.எஸ்.எஸ் ன் சித்தாந்தம் கொடிகட்டி பறக்கும். கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர், மாணவர் சங்கத்தினர், பெற்றோர்கள்,  பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் புதிய கல்விக் கொள்கை பற்றிய கருத்தினை தெரிவிக்க ஆறுமாத கால அவகாசம் தேவையென விடுத்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காமல் 484 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கையை பற்றிய கருத்தை ஒரு மாதத்திற்குள் தரவேண்டுமென மத்திய அரசு கூறியிருப்பது தன்னிச்சையாக, அக்கொள்கையை அமல்படுத்த துடிக்கிறது என்பதை மெய்ப்பிக்கிறது. 

 

அம்முயற்சியில் வெற்றி பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று தான் மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்ரிசான், மாநில கல்வி அமைச்சர்களுடைய கூட்டத்தை வரும் 22 ஆம் தேதி கூட்டியிருப்பதாகும்.

 

அக்கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை உறுதியாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் வற்புறுத்துவார். 

இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ.க வே ஆட்சியில் உள்ளதால் அம்மாநில கல்வி அமைச்சர்கள் புதிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பார்கள். தென்மாநில அமைச்சர்களின் குரல்கள் எடுபடாது. பெரும்பான்மையான மாநிலங்கள் ஏற்றுக் கொண்டன எனக் கூறி அக்கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் திணித்து விடும் ஆபத்து உள்ளது.

 

எனவே தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய  கல்வி அமைச்சர்கள் நம் மாநில உரிமையை வழக்கம் போல் சுய நலம் கருதி விட்டுக் கொடுத்துவிட்டு பெரும்பாலான மாநில கருத்தை நாங்களும் தாங்களும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது எனக் கூறிடாமல், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வாதிட்டு வெற்றிபெற முயற்சிக்க வேண்டும். எந்த நிலையிலும் அந்தக் கல்விக் கொள்கையை ஏற்கக் கூடாது. நம்முடைய கொள்கையில் இருந்து பின்வாங்க கூடாது.

 

தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு பாடப் புத்தகங்களின் அட்டையிலேயே காவி நிறத்தை பட்டையாகத் தீட்டி அதன் நடுவே எந்த வகுப்புப் பாடப்புத்தகம் என்று எழுதி இருப்பதும், பாரதியார் திருஉருவில் காவி நிற முண்டாசை அமைத்திருப்பதும், தமிழக அரசே பா.ஜ.க வாக மாறிவிட்டடது என்பதை உணர்த்துகிறது. இதிலிருந்து பா.ஜ.க வின் கல்வியை காவிமயமாக்கும திட்டத் திற்கு தமிழக அரசு துணை போகிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் இருந்து தமிழக அரசும், அமைச்சர்களும் திருந்தவில்லையேல், அக்கொள்கையை எதிர்க்கவில்லையேல் அதன் விளைவு தமிழக அரசுக்கு நல்லது அல்ல என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்தார்.

 

பேட்டியின் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன், மாவட்டச் செயலாளர் செல்வராஜ், மாநில பொறுப்பாளர் நிலையபட்டி ரவி மற்றும் மாநில, மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்