Skip to main content

கண்புரை மற்றும் தாடை அழுகல் அறுவை சிகிச்சை; கரூர் அரசு மருத்துவர்கள் சாதனை

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

karur government medical college hospital doctors new achievements 

 

கரூரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு கூட்டு எதிர் நுண்ணுயிர் சிகிச்சை மையத்தில் உறுப்பினராக இருந்து மருந்து வாங்கி உட்கொண்டு வருபவர்களில் 5 நபர்களுக்கு முதுமை காரணமாக கண்புரை நோய் ஏற்பட்டது. வழக்கமாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கண் அறுவை சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால், முதன்முறையாக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசன் வழிகாட்டுதலின்படி மருத்துவக் குழுவினர் மூதாட்டி ஒருவர் உட்பட ஐந்து பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு முதல்வர் சீனிவாசன் வாழ்த்து தெரிவித்தார்.

 

அதே போன்று, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த 43 வயதாகும் நபர் ஒருவர் தாடை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த அவருக்கு பல், முகம் மற்றும் தாடை சிறப்பு மருத்துவர் செந்தில்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதிக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு தாடை அழுகல் நோய் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

 

பல், முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொண்ட பொழுது அவரது மேல்தாடை எலும்பு, கண்கூடு தாடை எலும்பு மற்றும் சல்லடை எலும்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது என்பது சதை பரிசோதனை நிபுணரால் உறுதி செய்யப்பட்டது. பொது மருத்துவரால் அவரது சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுவாக இத்தகைய சிகிச்சையில் பாதிப்புக்குள்ளான நோயாளியின் மேல்தாடையை நீக்கிய பின் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். ஆனால், இந்த நோயாளிக்கு தாடை அழுகல் நோய் ஏற்பட்ட தாடையை அகற்றியதுடன், நவீனமாக கபால சதையை (டெம்போராலிஸ்) கண்களுக்கு பக்கவாட்டின் எலும்பின் வழியாக மேல்தாடைக்கு பதிலாக பொறுத்தி தாடை இழந்த பாதிப்பை நோயாளி உணராவண்ணம் மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த அறுவை சிகிச்சை பல் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டு உறுப்பு நிபுணர், மயக்க மருந்து நிபுணர், கண் மருத்துவர், பொது மருத்துவர் மற்றும் காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் என பன்முக நிபுணத்துவ மருத்துவக் குழு மூலமே இதனை சரி செய்ய இயலும். அனைத்து மருத்துவ நிபுணர்களையும் ஒருங்கிணைத்து உயிர்காக்கும் இந்த நவீன அறுவை சிகிச்சை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசன் தலைமையில் முதன்முறையாக இங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டு இருந்தால் சுமார் 5 முதல் 7 லட்சம் செலவாகி இருக்கும். ஆனால், இது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களிலும் அறுவை சிகிச்சைகளுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.