Skip to main content

டிஜிபி பதவி விலகக் கோரி திமுக சாலை மறியல்: ஜெ.அன்பழகன் உள்ளிட்ட திமுகவினர் கைது

Published on 27/04/2018 | Edited on 27/04/2018

 

 

டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டட ஜெ. அன்பழகன் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
 

 

குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியது. இந்த நிலையில்,  டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியதையடுத்து டி.ஜி.பி. அலுவலகத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.  இரண்டு துணை ஆணையர்கள் தலைமையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கடற்கரை சாலை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.  காந்தி சிலை அருகிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 
 

திமுக எம்எல்ஏ அன்பழகன் தலைமையில் திமுகவினர் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் கூடி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பேரணியின் போது டிஜிபி பதவி விலக வேண்டும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட ஜெ. அன்பழகன் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. அன்பழகன், டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலகவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றார். 

 

சார்ந்த செய்திகள்