
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப் பகுதி கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு பலாப் பழங்கள் என்றாலே கோயம்பேடு மார்க்கெட் வரை மணம் வீசும். அத்தனை தித்திப்பு நிறைந்த வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் பகுதி பலாப் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மரங்களிலும், கமிஷன் மண்டிகளிலும் அழுகிக் கிடக்கிறது.
இந்தப் பகுதியில் விளையும் பலாப் பழங்கள் நிறமும் சுவையும் அதிகம் என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 டன்னுக்கு குறையாமல் ஏற்றுமதி செய்யப்படும் பலாப் பழங்கள் தற்போது கிலோ ரூ.5 க்கும் ரூ.10 க்கும் கூட விற்க முடியாமல் தவிக்கின்றனர் விவசாயிகள்.
இந்தநிலையில் 'தான் எங்கள் ஊர் பலாவுக்கு உரிய விலை கொடு! மத்திய, மாநில அரசுகளே பலா விவசாயிகளக்கு நிவாரணம் கொடு! மதிப்புக்கூட்டி விற்க தொழிற்சாலை கொடு! தேக்கி வைத்து விற்க குளிர்பதன கிடங்கு கொடு! எங்க ஊரு பலாவுக்கு புவிசார் குறியீடு வழங்கு' என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புளிச்சங்காடு கைகாட்டியில் பலாப்பழங்களுடன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் பலா மரங்கள் வளர்க்கப்படுகிறது. பருவ காலங்களில் ஒரு நாளைக்கு 200 டன் வரை பலாப் பழங்கள் சந்தைக்கு வரும். தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.30 வரை விற்பனையாகும் சில நாட்களில் படிப்படியாக விலை குறைந்து ரூ.3 முதல் 10 க்குள் விற்பனை விலை குறைந்து போகிறது. ஆனால் அதே பழம் ஆலங்குடி தாலுகா எல்லையைக் கடந்து போனால் வியாபாரிகள் சொல்லும் விலை தான்.
கோயம்பேடு சந்தையில் எங்க ஊரு பலாப்பழங்களைத் தான் மக்கள் அதிகம் விரும்பி வாங்கிட்டு போவாங்க. எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் பலாப்பழங்களே அதிகம் விற்பனையாகும். எங்க ஊரு பலாப்பழங்களை வாங்கிச் சாப்பிடும் எல்லோருக்கும் இனிக்கும் ஆனால் அந்த பழங்களை உற்பத்தி செய்த எங்கள் விவசாயிகள் வாழ்க்கை தான் கசக்கிறது' என்கின்றனர் வேதனையோடு.