Skip to main content

ரயில் தண்டவாளத்தில் மது அருந்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர் விபத்தில் பலி! 

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

கோவை அருகே ரயில் மோதி ஒரே கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானலை சேர்ந்தவர் பீர் முகமது. இவரது மகன் சித்திக் ராஜா வயது 22 இவர் கோவை சூலூர்அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு சிவில் படித்து வந்தார். இவருடன் படித்து நிலக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் 22, தேனியை சேர்ந்த விஷ்னேஷ 22 இவர் அதே கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் இன்ஜினியரிங் மெக்கானிக் படித்து முடித்திருந்த ராஜபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி 22 ,கவுதம் 21 ஆகியோர் நடந்து முடிந்த தேர்வில் தோல்வி அடைந்தனர்.

 

incident in kovai...


தோல்வி அடைந்த பாடத்தில் மறுதேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு வந்திருந்தனர். தேர்வு முடிந்ததும் இந்த ஐந்து பேரும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளதாக தெரிகிறது. பீர் முகம்மதுவின் அறைக்கு சென்ற 5 பேரும், மீண்டும் மது அருந்துவதற்காக ராவுத்தர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளனர். டாஸ்மார்க் கடையை மூடுவதற்கு நேரமாகிவிட்டதால் மதுபாட்டில்களை வாங்கியவர்கள் அதே பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளதாக கூறப்படுகிறது.  அப்போது  கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததை, அறியாத அளவிற்கு போதை தலைக்கேறிய நிலையில் இருந்துள்ளனர். அப்போது  ரயில் வருவதை பார்த்த விஸ்வனேஷ் என்பவர் மட்டும் தப்பிவிட்டார் . கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மற்ற நால்வர் மீதும் மோதியதில் உடல் துண்டாகியும், தூக்கி வீசப்பட்டும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இதுகுறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.