Skip to main content

ஓசூரில் அரிவாளால் வெட்டி ரவுடி படுகொலை; அடுத்தடுத்த கொலைகளால் பொதுமக்கள் கிலி! 

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

hosur criminal passed away police in investigation

 

ஓசூரில் வட்டித்தொழில் செய்து வந்த ரவுடி மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள மூன்று கொலை சம்பவங்களால் ஓசூர் நகர மக்கள் கிலியில் உறைந்து போயுள்ளனர். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் உதயகுமார் (32). கார் ஓட்டுநர். அத்துடன், வட்டித் தொழிலும் செய்து வந்தார். பிப். 28ம் தேதி இரவு 11 மணியளவில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், உதயகுமாரை திடீரென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர், நிகழ்விடத்திலேயே பலியானார். அவருடைய தலையில் சில வெட்டுகள் ஆழமாக இறங்கி இருந்தது. 

 

இதுகுறித்து மத்திகிரி காவல்நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். உதயகுமாரின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட உதயகுமாருக்கு மனைவி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2020ல் நாகராஜ் என்பவரை வெட்டிக் கொல்ல முயன்றதாக அவர் மீது மத்திகிரி காவல்நிலையத்தில் ஒரு வழக்கு விசாரணையில் உள்ளது. 

 

அந்த வழக்கின் மீதான விசாரணை வரும் 8ம் தேதி ஓசூர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. இந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால், அவரை பழிவாங்கும் நோக்கத்தில் கொலை செய்துள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அவர் உள்ளூரைச் சேர்ந்த முக்கிய ரவுடி ஒருவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும், அவரை முன்னிறுத்தி வட்டித்தொழில் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. 

 

கொலையான நபர் எந்த டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கினார் என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். கொலையாளிகள் அவரை டாஸ்மாக் கடையில் இருந்தே பின்தொடர்ந்து வந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கும் காவல்துறையினர், வரும் வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொலையாளிகளின் உருவங்கள் பதிந்துள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்கின்றனர். 

 

இந்தத் தகவல்கள் அடிப்படையில் மத்திகிரி காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

ஒரு வாரத்தில் 3 கொலை: 

 

ஓசூரில் கடந்த ஒரு வாரத்தில் உதயகுமார் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பெங்களூருவுக்கு அருகில் ஓசூர் மாநகரம் இருப்பதால், கொலையாளிகள் குற்றங்களை நிகழ்த்திவிட்டு எளிதில் பெங்களூருவுக்கு தப்பிச்சென்று பதுங்கி விடுகின்றனர். இதனால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், கனரக தொழிற்சாலைகள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வேலை தேடி ஓசூருக்கு படையெடுக்கின்றனர். இதனால்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் பகுதி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொழில் நகரம் என்பதால் கோடீஸ்வரர்களும் பணப்புழக்கமும் அதிகம். அதனால் குற்றங்களும் சகஜமாக அரங்கேறி வருகின்றன. அடுத்தடுத்த கொலைகளால் ஓசூர் நகர மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.