
'மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் (06/12/2020), நாளையும் (07/12/2020) தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும்; ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த இரு தினங்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக முத்துப்பேட்டை (திருவாரூர்)- 10 செ.மீ., மாமல்லபுரம்- 7 செ.மீ., குடவாசல் (திருவாரூர்), நன்னிலம், தலைஞாயிறு (நாகை)- தலா 6 செ.மீ., திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கொள்ளிடம் (நாகை), சோழவரம் (திருவள்ளூர்), சிதம்பரம் (கடலூர்)- தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
டிசம்பர் 6- ஆம் தேதி குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, கேரளக் கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கூறிய பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.' இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.