Skip to main content

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை...நீரில் மூழ்கிய பயிர்கள்!

Published on 02/01/2022 | Edited on 02/01/2022

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நேற்று (01/01/2022) இரவு முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல வருடங்களுக்கு பிறகு வில்லுனி ஆறு உள்பட காட்டாறுகளில் தண்ணீர் செல்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிர்கள் முழுமையாக சாய்ந்து தண்ணீரில் மிதக்கிறது. கொத்தமங்கலம், காசிம்புதுப்பேட்டை, மேற்பனைக்காடு உள்பட பல கிராமங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தவித்து வருகின்றனர். கொத்தமங்கலத்தில் இன்று (02/01/2021) நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் கனமழையால் திருமண மண்டபத்திற்குள் தண்ணீர் போனதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியேற்றினார்கள்.

 

வில்லுனி ஆற்றில் பல வருடங்களுக்கு பிறகு தண்ணீர் வந்ததால் மக்கள் மகிழ்ச்சியோடு சென்று படங்கள் எடுத்துக் கொண்டனர். அதே போல அம்புலி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் மாங்காடு- கீரமங்கலம் சாலை மற்றும் பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

 

பேராவூரணி அருகே வாத்தலைக்காடு கிராமத்தில் பழைய வீடு ஒன்று இடிந்து சாய்ந்ததில் ஜனார்த்தனன் (வயது 71) என்பவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.