Skip to main content

எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி கோரிக்கை

Published on 07/03/2018 | Edited on 07/03/2018


எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தனியரச, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ., மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,

 

karunas thamimun ansari thaniyarasu


பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா அவர்கள் சமீபகாலமாக சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வருவதை தமிழ்நாட்டு மக்கள் சிறிதும் விரும்பவில்லை.
 

தமிழின பற்றாளர்களையும், திராவிட சிந்தனையாளர்களையும், சிறுபான்மையின மக்களையும்  அவர் தொடர்ந்து  இழிவு படுத்தி வருகிறார். இப்போது திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டதை வரவேற்று, அதேபோல் தமிழகத்தில் பெரியார் சிலையையும் தகர்ப்போம் என கருத்து கூறியிருப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.
 

 திரிபுராவில் லெனின் சிலைகளும், திருப்பத்தூரில் பெரியார் சிலையும் தற்போது மீரட்டில் அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தி இருப்பது நாடெங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இவை அனைத்திற்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களே பொறுப்பாகும். இவை அனைத்தையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 
 

லெனின் ஏழைகளின் குரலாக உலகமெங்கும் ஒலிப்பவர். அம்பேத்கர் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பவர், தந்தை பெரியார் அவர்கள் சமூக நீதியின் குரலாக ஒலிப்பவர். இதை எச்.ராஜா போன்றவர்கள் உணர வேண்டும். கடும் எதிர்ப்பை தொடர்ந்து, தனக்கு தெரியாமல் தனது "அட்மின்" அக்கருத்தை பதிவிட்டிருப்பதாக சொல்வது நம்பும் படியாக இல்லை.
 

H. Raja


 
மேலும், இவ்விஷயத்தில் சம்பந்தமே இல்லாமல் பசும்பொன் தேவர் ஜயா அவர்களை முன்னிருத்தி, எச்.ராஜா தப்பிக்க முயல்வதையும் வன்மையாக கண்டிக்கிறோம். பசும்பொன் தேவர் ஐயா ஆன்மீக வாதியாகவும், மத நல்லிணக்க வாதியாகவும் திகழ்ந்தவர், வன்முறைகளுக்கு எதிரானவர், அவர் ஒரு ஜனநாயக வாதி என்பதை எச்.ராஜா போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். பெரியார் மீது அன்பு கொண்ட தமிழக மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.