![Government school teacher arrested for misbehaving with student](http://image.nakkheeran.in/cdn/farfuture/4gqA7vvGFSDSNX9q517l5ubNzlTbR81pb50uCw-BUXU/1719652120/sites/default/files/inline-images/13_143.jpg)
நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தர்மபுரியில், அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியைச் சேர்ந்தவர் சரவணன்(48). இவர் தர்மபுரி ஆட்டுக்காரன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆட்டுக்காரன்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், ஆசிரியர் சரவணன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக தர்மபுரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஏற்கெனவே இறந்து விட்டார். தாயின் பராமரிப்பில் இருந்து வந்த அந்தச் சிறுமிக்கு, ஆசிரியர் சரவணன் அவ்வப்போது கல்வி மற்றும் குடும்பச் செலவுக்கான உதவிகளைச் செய்து வந்துள்ளார். இதனால் அவர்களிடையே நெருக்கமான பழக்கம் இருந்து வந்துள்ளது.
அந்தச் சிறுமி, பிளஸ்2 படிப்பை சமீபத்தில் நிறைவு செய்தார். அதன்பிறகு ஆசிரியர் சரவணனுடன் அவர் சரியாகப் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில்தான் சரவணன் அவரைச் சில நாள்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த ஆசிரியரைக் காவல்துறையினர் போக்சோ சட்டப்பிரிவில் ஜூன் 27ஆம் தேதி கைது செய்தனர். ஆசிரியர் சரவணனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளதும் அவருடைய மனைவியும் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதும் தெரிய வந்துள்ளது.
நடப்புக் கல்வி ஆண்டு தொடங்கி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அதற்குள் ஆசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரி மாவட்ட ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.