Skip to main content

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை; மாணவிகள் போராட்டம்

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

girl students in Kalashetra; Students struggle

 

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பயிற்சியாளர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

1936 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலாஷேத்ரா நுண்கலை கல்லூரி மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கலாஷேத்ரா நுண்கலை கல்லூரியில் பணியாற்றும் மூத்த ஆசிரியர் ஒருவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை தமிழக டிஜிபியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

 

'ஆசிரியரை பாதுகாக்கும் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக தனது பெயரை தவறாக பயன்படுத்தி பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என மாணவி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதனால் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தேசிய மகளிர் ஆணையம் மாற்றிக் கொண்டது.

 

ஆனால் ஒருவர் அல்ல, நான்கு பேர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாஷேத்ரா நுண்கலை கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி ஒருவர் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ''ஒரு மெயின் சீனியர் ஸ்டாப். அவர் பெயர் ஹரிபத்மன். அவரை இங்கே தங்க வைத்து வீடு எல்லாம் கொடுத்து மரியாதை செலுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவருக்கு தகுதியே கிடையாது. அவர் எங்கள் பிள்ளைகளுக்கு வார்த்தைகளால் தொல்லை கொடுக்கிறார். பாலியல் தொல்லை கொடுக்கிறார். பார்க்கின்ற பார்வையே சரியில்லை. இன்னும் 3 பேர் இருக்காங்க சஞ்சிதலால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணன். சஞ்சிதலால் பசங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மிச்சம் இரண்டு பேர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள்'' என்றார்.

 

2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த கொடுமைகள் நடைபெற்று வருவதாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.