
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுமையாபானு(35). இவரது கணவர் நாகரத்தினம்(37). இவர்கள் புதுக்கோட்டை மனப்பட்டி ரோடு பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கணவன் மனைவி இருவரும் கடந்த இரண்டு நாட்களாக திருப்பதிக்கு சென்றுவிட்டு நேற்று திங்கள்கிழமை(28.4.2025) இரவு வீட்டிற்கு வந்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். நள்ளிரவு 11.30 மணிக்கு நான்கு பேர் வீட்டின் பின் புறக் கதவை உடைத்து கொண்டு வீட்டின் உள்ளே வந்துள்ளனர். அப்போது இருவரும் தூங்கிக்கொண்டு இருந்தை பார்த்த திருடர்கள் நாகசுந்தரத்தை எழுப்பியுள்ளனர்.

திடீரென எழுந்த நாகசுந்தரம், எஸ்.ஐ. சுமையாபானு ஆகியோர் அதிர்ச்சியில் யார் என்ன என்று கேட்டபோது திருடர்கள் வைத்திருந்த இரும்பு ராடால் நாகசுந்தரத்தின் தாடைப் பகுதியில் அடித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் சுமையாபானு தடுக்க முயன்ற போது அவரையும் அடிக்க முயற்சித்துள்ளனர். பின்னர் நகைகளை கழற்றிக் கொடுங்கள் என்று மிரட்டியுள்ளனர். கணவன் மனைவி இருவரும் அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகள், ஒரு மோதிரம், எஸ்.ஐ சுமையாபானு அணிந்திருந்த இரண்டு தோடுகள் உள்பட சுமார் பத்து சவரன் தங்க நகைகளை கழற்றிக் கொடுத்துள்ளனர். இதனைப் பெற்ற கொண்ட திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் காயமடைந்த நாகசுந்தரம் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்ததிருக்கோகர்ணம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடையங்களைச் சேகரித்து சென்றனர். மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தனிப்படைகள் அமைத்து விசாரணையைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

திருடர்கள் முகத்தை துன்டால் மறைத்துக்கொண்டும் கையில் உறை அணிந்து கையில் இரும்பு ராடு வைத்திருந்துள்ளனர். மேலும் திருடர்கள் கொண்டுவந்த இரும்பு ராடு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் கிடந்துள்ளது. இதனையும் போலீசார் கைப்பற்றி தடையங்களை சேகரித்தனர். மேலும் திருக்கோகர்ணம் போலீசார், தனிப்படை போலீசார் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்மைக் காலமாக தொடர்ந்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சப் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.