Skip to main content

புயலின் கோரத்தாண்டவம் இன்னும் விவசாயிகளை விட்டுவைக்கவில்லை... தென்னை மரங்களை வெட்டி அழிக்கும் வேதனை!!!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020
Coconut trees

 

கஜா புயல் தாக்கி இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால் அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் விவசாயிகள் மீளவில்லை. மேலும் புயலில் அசைந்து நின்ற தென்னை மரங்களும் காய்க்காததால் தோப்புகளை கண்ணீரோடு வெட்டி அழித்து வருகிறார்கள் விவசாயிகள்.

 

2018 நவம்பர் 16 அதிகாலை புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை கஜா புயல் ஆட்டி அசைத்துவிட்டு சென்றது. மரங்கள், கட்டிடங்கள், மின் கம்பங்கள், படகுகள் உடைந்து விழுந்தன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீண்டு எழ முடியாமல் தவித்து கொண்டிருந்த விவசாயிகளுக்கும், எஞ்சியுள்ள தென்னை மரங்களை வைத்து வாழ்க்கையை நகர்த்தி விடலாம் என்று எண்ணி இருந்த விவசாயிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. 

 

புயலில் அசைந்து நின்ற தென்னை மரங்களுக்கு உரம், குப்பை வைத்து வழக்கம் போல பராமரித்தனர். ஆனால் 2 ஆண்டுகளை தொட உள்ள நிலையில் எந்த வளர்ச்சியும் இல்லை. ஒரு பாளை கூட வெளியே வரவில்லை. அதனால் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் பலனில்லை என்ற முடிவில் தாங்கள் நட்டு வளர்த்த தென்னை மரங்களை தாங்களே வெட்டி அழித்து வருகின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் தென்னை விவசாயம் அதிகம். ஆனால் காய்ப்பு இல்லை என்று வெட்டி அழிப்பதும் இந்த பகுதியில்தான் அதிகம். வெட்டப்படும் தென்னை மரங்களை சேலத்திற்கு செங்கல் சூளைகளுக்கு குறைந்த விலைக்கு அள்ளி செல்கிறார்கள். 

 

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறும்போது, தென்னையை பிள்ளை போல வளர்த்து வந்தோம், கஜா புயல் அழித்துவிட்டு போனது. எஞ்சிய தென்னை மரங்கள் எங்களை வாழ வைக்கும் என்ற நம்பிக்கையில் செலவுகள் செய்து உரம், குப்பை வைத்தும் பலனில்லை. தொடர்ந்து பராமரிக்க வசதியும் இல்லை, தண்ணீரும் இல்லை. அதனால் ரூபாய் 300 செலவு செய்து ஒரு மரத்தை வெட்டி ரூ. 250 க்கு அதாவது 50 ரூபாய் நட்டத்தில் செங்கல் சூளைக்கு கொடுக்கிறோம். புதிதாக நட்ட தென்னங்கன்றுகளையும் வண்டு, பூச்சிகள் தாக்கி அழிக்கிறது. விவசாயிகள் எந்த வகையிலும் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றனர் வேதனையாக. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.