வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும், தற்போதைய அமமுக நகர செயலாளருமான ஏ.கே.சி சுந்தரவேல் அவரது குடும்பத்துடன் இன்று ஏப்ரல் 6 -ம் தேதி காலை சிகிச்சைக்காக தனது காரில் திருப்பத்தூரில் இருந்து சென்னை சென்றுள்ளார்.

இந்நிலையில் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் அருகே கார் சென்றுக்கொண்டிருந்தபோது முன்னால் சென்ற டிரெயிலர் லாரி மீது கார் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரவேல் அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் ஓட்டுநர் வீரமணி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அமமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுந்தரவேல் நகர மன்ற தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஒரு மகள் உள்ளார்.