Skip to main content

"நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாதம் 10,000 வழங்க வேண்டும்" நாட்டுப்புற கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு! 

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

"Folk artists should be given Rs 10,000 per month" Folk artists petition to the District Collector!

 

கடலூர் மாவட்டத்தில் தெருக்கூத்து, மேடை நாடகம், பம்பை உடுக்கை, நையாண்டி மேளம் போன்ற கிராமியக் கலைஞர்கள் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தக் கலைத்தொழில் மூலம் அவர்களுக்கு வேலை கிடைப்பது வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே.  

 

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பால் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் தொழில் வாய்ப்பில்லாமல், வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. அதிலிருந்து மீள்வதற்கு இந்த ஆண்டு தொழில் வாய்ப்பு கிடைக்கும், வேலை கிடைக்கும் குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்றிருந்த வேளையில், இந்த ஆண்டும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருவிழா உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டும் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

 

இதையடுத்து, தமிழ்நாடு அனைத்து நாட்டுப்புறக் கலைஞர் சங்கம் கடலூர் மாவட்டக் கிளையின் சார்பில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நாடக நடிகர்கள், வேடமணிந்து பம்பை, உடுக்கை, நையாண்டி மேளம், பறை இசை போன்ற நாட்டுப்புற இசை வாத்தியங்களை இசைத்து, ஆட்டம் ஆடி, பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

 

அப்போது அவர்கள், "இப்போதுதான் திருவிழாக் காலம் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கினால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடன உடன வாங்கி வயிற்றைக் கழுவினோம். இந்த ஆண்டாவது வேலை கிடைக்கும், எங்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், மீண்டும் ஊரடங்கு என்றால் எங்களின் அன்றாட வாழ்க்கையே  கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் கலையும் கலைஞர்களும் அழியும் நிலை உருவாகியிருக்கிறது.

 

எனவே மற்ற நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடு போல், எங்களுடைய கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் 50% அனுமதிக்க வேண்டும். சிறு சிறு கிராமங்களில் கலை நிகழ்ச்சி நடத்த அரசு முன்வர வேண்டும். மேலும் கரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படியென்றால்தான் இதனை நம்பியுள்ள கலைஞர்களின் கலை குடும்பமும் உயிர் பிழைக்கும். இல்லையென்றால் கலையும் இருக்காது, கலைஞர்களும் இருக்கமாட்டார்கள். கடந்த ஆண்டு மூன்றில் ஒரு பங்கு கலைஞர்களுக்கு மட்டுமே அரசு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கியது.  மீதமுள்ள கலைஞர்களை ஏமாற்றிவிட்டது. எங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்ற அரசு தரும் உதவி, எந்த விதத்திலும் எங்கள் கஷ்டத்தைத் தீர்க்காது. ஆகவே நாங்கள் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் கலைப் பண்பாட்டுத் துறையில் அடையாள அட்டை, நலவாரிய புத்தகம் வைத்திருக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் மாதம் ரூ. 10,000 வழங்க வேண்டும்" என கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.