
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ். இளங்கோவன் களமிறங்கி பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு கரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இதயத் தமனி நோய் மற்றும் லேசான கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவர் நன்றாகக் குணமடைந்து வருகிறார்’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சிகிச்சைகள் முடிந்து 22 நாட்களுக்குப் பிறகு இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.