Skip to main content

தி.மு.க. தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Published on 19/12/2018 | Edited on 19/12/2018
geetha jeevan



 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியில் தி.மு.க. தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைப்பெற்றது. 

 

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கீதாஜீவன், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று விருப்பப்படுகின்றனர். மக்கள் எண்ணம் உறுதியானது. மக்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

 

 

தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறோம் என்று மெத்தனமாக இருக்காமல் அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும். சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அதனை வழிமொழியும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.


 

இதில் முதல் கட்டமாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 21-ந் தேதி உரிய அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அடுத்த கட்டமாக வியாபாரிகள் சங்கத்தினருடன் கலந்துபேசி கடையடைப்பு போராட்டம் நடத்துவது, கையெழுத்து இயக்கம் நடத்துவது போன்ற போராட்டங்கள் நடைபெறும்.
 

 

மக்களை தவறுதலாக வழிநடத்திவிடக் கூடாது. அறப்போராட்டம் என்பதில் உறுதியாக உள்ளோம். நாங்கள் எல்லா இயக்கத்தையும் எங்களுடைய ஆர்ப்பாட்டத்துக்கு அழைக்க உள்ளோம். அவர்கள் கலந்து கொள்ளலாம். மற்ற அமைப்புகள் எங்களை போராட்டத்துக்கு அழைத்தால் நாங்களும் கலந்து கொள்வோம். இவ்வாறு கூறினார்.
 

 

 

 


 

சார்ந்த செய்திகள்