Skip to main content

சென்னையின் தாகத்தை தணிக்கும் கடலூர் மாவட்ட நீர் நிலைகள்!

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் நிலை வீராணம் ஏரியாகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசம் பெறுகிறது. இப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இந்த ஏரி விளக்கி வருகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
 

 

சென்னையில் கோடை தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கடந்த மாதம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக காவிரி தண்ணீரி அனுப்பி வைக்கப்பட்டு ஏரி நிரப்பப்பட்டது. இதன் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியில் இருந்து வினாடிக்கு 74  கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.


 

Cuddalore District Water Levels to cure the thirst of the people of Chennai

 

இந்தநிலையில் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், வெயில் காரணமாகவும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 44.90 அடி உள்ளது. ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு 39 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.


 

சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை இருப்பதால் ஏரியில் இருந்து தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்த விநாடிக்கு 74 கன அடியை தொடர்ந்து அனுப்பிட பொதுப்பணித்துறை அதிகாரிகளும், மெட்ரோ வாட்டர் அதிகாரிகளும்  இணைந்து முடிவு செய்தனர்.
 

 

அதன்படி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை வாலாஜா ஏரியில் நிரப்பி அந்த தண்ணீரை பரவனாற்றில் அனுப்பி அங்கிருந்து ராட்சத  மின்மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்பட்டு வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் சென்னைக்கு வீராணம் குழாய் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது 5.5 அடி கொள்ளளவு கொண்ட வாலாஜா ஏரியில் 5 அடி தண்ணீர் உள்ளது. மேலும் சேத்தியாத்தியாதோப்பில் இருந்து பண்ருட்டி வரை உள்ள 10க்கும் மேற்பட்ட போர்வெல்கள்  மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விநாடிக்கு 18 கன வீதம் வீராணம் குழாய் வழியாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆக மொத்தம் விநாடிக்கு 74 கன அடி தண்ணீர் கடலூர் மாவட்டத்தில் இருந்து தொடர்ந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

 

Cuddalore District Water Levels to cure the thirst of the people of Chennai

 

2 மாதம் வரை இதுபோல தண்ணீர் அனுப்பி சென்னையின் கோடை குடிநீர் பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்று மெட்ரே வாட்டர் அதிகாரிகள் தெரிவித்தனர். கடலூர் மாவட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருக்கும் நிலையில் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

சார்ந்த செய்திகள்