
தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிறந்தநாள் அவரது ரசிகர்களாலும், தொண்டர்களாலும் நேற்று(22.6.2025) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கெடிலும் கூட்ரோடு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஜெயமனி(31), சரவணன் (38), செந்தில்முருகன்(38) ஆகியோர் பேனர் வைத்துள்ளனர். அந்த இடத்தில் திமுகவினர் பேனர் வைக்கக் கூடாது என கூறியதாக சொல்லப்படுகிறது. ‘அதைச்சொல்ல நீங்க யார்.. என ஒருமையில் பேசி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அப்பகுதியில் பேனர் வைத்து விட்டு சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் விஜய் கட்சியினர் வைத்த அந்த பேனரை திமுகவினர் கிழித்தாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக மற்றும் த.வெ.க.வினரிடையே நள்ளிரவில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் திமுகவைச் சேர்ந்த உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜவேல் மற்றும் அவருடன் வந்த நபர்களுக்கும் விஜய் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மாறிமாறி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இருதரப்பும் அடித்துக்கொண்டதில் விஜய் கட்சியைச் சேர்ந்த சரவணன் மற்றும் ஜெயமனி ஆகியோரின் மண்டை உடைந்து. இரத்த காயங்களுடன் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட பேனரை அகற்றக் கோரி இருதரப்பினர் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.