Skip to main content

10 கோடி ரூபாய் செல்ஃபோன் கொள்ளையில் மத்தியப்பிரதேச கும்பலுக்குத் தொடர்பு? தனிப்படை தீவிர விசாரணை!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

chennai mobiles container police investigation

 

கிருஷ்ணகிரி அருகே, கண்டெய்னர் லாரியைக் கடத்தி, பத்து கோடி ரூபாய் பெறுமானமுள்ள செல்ஃபோன்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

சென்னையில் உள்ள தனியார் செல்ஃபோன் கம்பெனியில் இருந்து, மும்பையில் உள்ள ஷோரூம்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஒரு கண்டெய்னர் லாரியில் 10 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ரெட்மி ரக செல்ஃபோன்கள் ஏற்றப்பட்டன. இந்த லாரி, அக். 20- ஆம் தேதி இரவு புறப்பட்டது. சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த சதீஷ்குமார் (29), கோவையைச் சேர்ந்த அருண் (26) ஆகியோர் ஓட்டுநர்களாக இருந்தனர்.

 

இந்த லாரி, புதன்கிழமை (அக். 21) அதிகாலை 03.00 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மேலுமலை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த மூன்று லாரிகள் திடீரென்று செல்ஃபோன் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்து நின்றது. அந்த லாரிகளில் இருந்து இறங்கிய 20க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், சதீஷ்குமார், அருண் ஆகியோரை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவர்கள் இருவரையும் கண்களைக் கட்டி, அப்பகுதியில் உள்ள ஒரு புதருக்குள் தள்ளிவிட்டு, கண்டெய்னர் லாரியைக் கடத்திச் சென்றனர்.

 

புதருக்குள் தள்ளிவிடப்பட்ட இருவரும் எழுந்து தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக மர்ம கும்பலைச் சேர்ந்த இருவர் அங்கேயே விடியும் வரை காவலுக்கு இருந்துள்ளனர். காலையில் அவர்களின் கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்துவிட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

 

இதையடுத்து, பலத்த காயம் அடைந்த ஓட்டுநர்கள் இருவரும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நடந்த சம்பவத்தை அறிந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்தான் இதுகுறித்து முதலில் சூளகிரி காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.

 

இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். முதல்கட்ட விசாரணையில், கடத்திச் செல்லப்பட்ட கண்டெய்னர் லாரி, கிருஷ்ணகிரி மாவட்டம் அலகுபாவி என்ற இடத்தில் நின்று கொண்டிருப்பதும், அதில் இருந்த 10 கோடி ரூபாய் பெறுமானமுள்ள செல்ஃபோன்களை மர்ம கும்பல் வந்த மூன்று லாரிகளில் ஏற்றிக்கொண்டு தப்பி ஓடியிருப்பதும் தெரிய வந்துள்ளது. அதையடுத்து, கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் மீட்டனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி பண்டிகங்காதர், மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி பிரதீப்குமார் ஆகியோரின் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி முரளி தலைமையில் 9 தனிப்படை குழு அமைக்கப்பட்டது.

 

cnc

 

இந்தக் கடத்தலில் மத்தியப்பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான்ஜா என்ற கொள்ளை கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

 

கொள்ளை கும்பல் அண்டை மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், தனிப்படை காவல்துறையினர் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா மற்றும் ஓடிசா ஆகிய மாநிலங்களில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.