தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், நெல் கொள்முதல் மற்றும் அரசின் காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது.
வரும் 17 ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் குளிர் கால கூட்டத் தொடர் துவங்கும் நிலையில் புதிய சட்ட மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்ட புதிய முதலீடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வடகிழக்கு பருவமழை குறித்து அனைத்து துறைகளும் எந்த அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராகி இருக்கின்றன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. துறைவாரியாக ஒவ்வொரு அமைச்சரிடமும் முதல்வர் தகவல்களை பெற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சட்டப்பேரவையில் எதிர்த்தரப்பில் எந்த வகையான கேள்விகளைக் கேட்டாலும் அமைச்சர்கள் யாரும் உணர்ச்சிவசப்படக்கூடாது என்றும் பொறுமையாக அவர்களுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திமுகவின் தலைவராக ஸ்டாலின் இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்ற பொழுதும் திமுக அமைச்சர்களிடமும் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடமும் இதேவகையான அறிவுரைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.