Skip to main content

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பேருந்தில் ஏற்ற மறுக்கப்பட்ட பெண் தூய்மைப் பணியாளர்கள்' - இருவர் சஸ்பெண்ட்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'Women sanitation workers refused to board the bus' - two suspended

தஞ்சையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பதாக 50க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகளில் தூய்மைப் பெண் பணியாளர்கள் ஏற முயன்ற நிலையில் பேருந்து நடத்துனர்கள் பேருந்தில் ஏற்ற மறுப்பு தெரிவிப்பதோடு, அலைக்கழிப்புக்கு ஆளாக்குவதாகவும் புகார்கள் எழுந்தது. இந்நிலையில் அலைக்கழிப்புக்கு ஆளான பெண்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் சாலையில் அமர்ந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள்  பேச்சுவார்த்தை நடத்தி மாற்றுப் பேருந்து மற்றும் ஆம்புலன்சில் பெண் பணியாளர்களைப் பணிக்கு அனுப்பி வைத்தனர்.

'Women sanitation workers refused to board the bus' - two suspended

இதில் பாதிக்கப்பட்ட பெண் தூய்மையாளர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நாங்கள் 7:00 மணிக்கு டூட்டிக்கு போகணும். ஆபீசில் சொன்னாலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். 7:15 மணிக்குத்தான் பஸ் எடுக்க வேண்டும் எனக் கலெக்டர் சொல்லி இருக்காருன்னு சொல்கிறார்கள். அதான் கலெக்டர் வரட்டும் என நாங்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினோம். எங்களுடைய மேனேஜர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் நாங்கள் இப்பொழுது போகிறோம். பஸ்ஸை நிப்பாட்ட சொன்னாலும் எந்தப் பஸ் ஸ்டாப்பிலும் நிப்பாட்டுவது கிடையாது. நாயை விடக் கேவலமாக நினைக்கிறார்கள்'' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பேருந்து நடத்துநர் மற்றும் பேருந்து நிலையத்தின் டைம் கீப்பர் ஆகிய இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்குப் பிறகு சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'அதிமுக ஓட்டு எங்களுக்குத்தான்'- லிஸ்ட்டில் சேர்ந்த திமுக

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
 'ADMK votes are for us' - DMK joined the list

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன.

திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'முன் காலங்களில் அதிமுகவிற்காகவும், தேமுதிகவிற்கும் ஆதரவு தெரிவித்து பணியாற்றியதால் அந்த உரிமையோடு கேட்கிறேன் அதிமுகவினர், தேமுதிகவினர் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்' என மேடையில் பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நாம் தமிழர் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து இருந்தனர்.

 'ADMK votes are for us' - DMK joined the list

இதனால் அதிமுக மற்றும் தேமுதிக வாக்குகளைப் பெற நாம் தமிழர் தீவிரம் காட்டுவதாக கருத்துக்கள் எழுந்தது. அதேநேரம் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 'தாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவெடுத்ததுள்ளதால் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாது' எனத் தெரிவித்திருந்தார்.

 'ADMK votes are for us' - DMK joined the list

அதேநேரம் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவின் ஆதரவை நேரடியாக கோரியுள்ளார். முன்னதாக அவருடைய பிரச்சார மேடையில் இடம் பெற்றிருந்த பேனரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அடையாளமாக மோடியுடன் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதோடு மட்டுமல்லாது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'நாங்கள் தேர்தலை புறக்கணித்து விட்டோம் என்பது எங்களுடைய கட்சி தொண்டர்களுக்கும் தெரியும். ஆனால் அதிமுக கூட்டணி இல்லாத பாமக மேடையில் ஜெயலலிதா புகைப்படம் வைப்பது என்பது செய்யக்கூடாத ஒன்று. ஆனால் இன்று அதைச் செய்கிறார்கள் என்றால் அது சந்தர்ப்பவாத அரசியல் நோக்கமாகத்தான் இருக்கும். அப்படித்தான் அதைக் கருத வேண்டும். அதேநேரம் படத்தை போடாதீர்கள் என்று நாங்கள் சொல்ல முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.

 'ADMK votes are for us' - DMK joined the list


இந்நிலையில் 'எம்ஜிஆர் ஒரு காலத்தில் திமுகவில் தான் இருந்தார். எனவே அதிமுகவின் ஓட்டு எங்களுக்கு தான் கிடைக்கும். திமுக ஆட்சியில் இரண்டு முறை எம்.ஜி.ஆர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். எனவே திராவிட கட்சி என்ற அடிப்படையில் அதிமுக ஓட்டுகள் எங்களுக்குத்தான் கிடைக்கும்' என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை' அப்படி என்றால் எல்லோரும் வந்து அதிமுகவில் சேர்ந்து விட வேண்டியதுதானே. அவருக்கு அடையாளம் கொடுத்தே அதிமுக தான்' எனத் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர், பாமகவை தொடர்ந்து அதிமுக ஓட்டு எங்களுக்குத்தான் என லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது திமுக.