Skip to main content

விபரீத முடிவு; பிஞ்சுக் குழந்தைகளை தவிக்கவிட்ட தாய் - தந்தை

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Husband and wife lost their lives near Sankarankovil

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள உள்ள பனவடலிசத்திரம் அருகே வண்ணாம் பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் கனகராஜ்(35) என்பவர் பனவடலிசத்திரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சகுந்தலா(26). இந்த தம்பதிக்கு திருமணமாகி 8 வருடம் ஆன நிலையில், 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். 

 

கடந்த ஞாயிறு அன்று தீபாவளியைக் கொண்டாடிய நிலையில் அதற்கு அடுத்த நாள்(13.11.2023) மாலை, கனகராஜ் மற்றும் அவரது மனைவி சகுந்தலா (26) இருவருக்கும் இடையில் சில மாதமாகப் பிரச்சினை இருந்து வந்த காரணத்தால் அவர்களுக்குள் தகராறு மூண்டதாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டதால் கனகராஜின் மகள் பதறியபடி வீட்டுக்கு வெளியில் நின்று கதவைத் தட்டியபடி நீண்ட நேரமாக அம்மாவை அழைத்துள்ளார். இதில் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது கனகராஜ் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட காயங்களுடன் தரையிலும், மனைவி சகுந்தலா தூக்கிட்ட நிலையிலும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பனவடலிசத்திரம் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். 

 

சம்பவ இடத்திற்குச் சென்ற பனவடலிசத்திரம் காவல்துறையினர், இருவரின் உடலையும் கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தீபாவளி கொண்டாடிய மறுநாளே கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் தற்கொலை செய்து கொண்டதுடன் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் அனாதையாக கதறியபடி நின்ற சம்பவம் அக்கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கணவன் மனைவி இருவரது தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்