Skip to main content

சென்னையில் மின்னிய கடல் அலைகள்! – கெட்ட செய்திக்கான அறிகுறியா?

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் மற்றும் பெசண்ட் நகரிலுள்ள இலியாட்ஸ் கடற்கரைப் பகுதிகளில், ஆகஸ்ட் 18-ந்தேதி இரவு வழக்கத்தைவிட கூட்டம் அதிகமானது. கடல் அலைகளில் நீலநிறத்தில் ஏதோ வித்தியாசமான ஒன்று மின்னுவதைக் காணவே இந்தளவு கூட்டம் கூடியிருக்கிறது. என்ன காரணத்திற்காக கடல் அலைகள் இப்படி மின்னுகின்றன என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை எனினும், வியப்புடன் இதனைக் கண்டு ரசித்துச் சென்றனர்.

 

alka in thiruvanmiyur beach

 

 

கடல் மின்னுதல் என்று சொல்லப்படும் இந்த நிகழ்வுக்குப் பின்னால் இருப்பது, நாக்டிலூக்கா ஆல்கா எனப்படும் ஒருவகை பாசியினம். இந்த ஆல்காக்கள் இயல்பை இழக்கும்போது இதுபோன்ற வண்ணங்களை வெளியிட்டு மின்னுவது வழக்கம். இவற்றில் இருக்கும் லூசிஃபெரன்ஸ் எனப்படும் என்சைம்கள், ஆக்சிஜனோடு வினைபுரிந்து வெளிச்சத்தை ஏற்படுத்துகின்றன. இப்படிப்பட்ட உயிரி வெளிச்ச நிகழ்வுகள் மின்மினி போன்ற சில பூச்சியினங்களில் நடப்பதை நாமே பலமுறை பார்த்திருப்போம். ஆனால், அவற்றைப் போலவே நாக்டிலூக்கா ஆல்காக்கள் மின்னுவதை இயல்பான நிகழ்வாக கருதமுடியாது.

மிக அழகான இந்த நிகழ்வுக்குப் பின்னால் மிகஆபத்தான செய்தி ஒளிந்திருக்கிறது. நாக்டிலூக்கா போன்ற ஆல்காக்கள் அளவுக்கதிகமாக கடல்வாழ் பாசியினங்களை அழிக்கக்கூடியவை. இதனால், கடல்சார் உணவுச்சங்கிலி சிதைந்து போகும் வாய்ப்புள்ளது. இந்த ஆல்காக்கள் அதிகளவு அம்மோனியா வாயுவை வெளியிடுவதால், மீன்கள் இறப்பதற்கும் காரணமாகின்றன. மேலும், கடல்பரப்பில் மாசினையும் இவை ஏற்படுத்த வல்லவை.

ஆல்காக்கள் தொடர்பான ஒரு ஆய்வறிக்கை, நாக்டிலூக்கா ஆல்காக்கள் வழக்கத்தைவிட அளவில் அதிகமாவதால் புவி வெப்பமயமாதல் துரித நிகழ்வாக மாறும் என்கிறது. அதேபோல், சென்ற ஆண்டு வெளியான ஒரு அறிக்கையில், மும்பையின் கடற்பரப்பில் இதுபோன்ற வண்ண ஒளிகள் மின்னியதற்கு இந்த ஆல்காக்களே காரணமென்றும், அரபிக்கடலின் மேற்பரப்பு வெப்பமடைந்ததும், ஊட்டச்சத்து இணைப்பு துண்டித்துப் போனதும் இந்தவகை ஆல்காக்கள் அதிகரித்ததே காரணமென்று சொல்லப்பட்டுள்ளது.

இதுபோன்ற உயிரி வெளிச்ச நிகழ்வுகள் முழுமையாக புரிந்துகொள்ளப்படாத, புரியாத புதிராகவே இருக்கின்றன என்றாலும், லேசாக இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

2000-ஆம் ஆண்டுகளில் இருந்து இதுமாதிரி நிகழ்வுகள் அரபிக்கடலில் பலமுறை நடந்திருக்கின்றன. கோவா, மும்பை மற்றும் கேரளாவின் கழிமுகங்களிலும் இந்த கடல் வெளிச்ச நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘கும்பளாங்கி நைட்ஸ்’ என்ற மலையாளப் படத்திலும் இந்த ஆல்காக்கள் மின்னுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.