
கடந்த சில நாட்களாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் திமுக கூட்டணிக் கட்சிகளுடன் பேசி வருகிறோம். விரைவில் அவர்களும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார்கள் என்று பேசி வருகின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் நேரு, உள்ளிட்ட திமுக தலைவர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.யிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் திமுகவோ அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளோ அஞ்சக்கூடிய நிலையில் இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த கட்சிகளே தற்போது வெளியேறியிருக்கிறார்கள். அவர்களையே இவர்களால் இன்னும் கூட்டணிக்குள் கொண்டுவர முடியவில்லை.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், பாட்டாளி மக்கள் கட்சியும், தேமுதிகவும் இதே கூட்டணியில் இருந்த கட்சிகள். அண்மையில் தமிழக வந்த பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்திக்க பாமகவும் தயாராக இல்லை, தேமுதிகவும் தயாராகவில்லை. இன்னும் அதிமுக ஒரு முழு வடிவம் பெறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால் அவர்கள் திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வரும் என்று சொல்வது நகைப்புக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.