
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று (12.06.2025) மதியம் 01.39 மணிக்கு பேயிங் 787 - 8 ட்ரீம்லைனர் விமானம் லண்டனை நோக்கிப் புறப்பட்டது. 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு விமான கேப்டன் சுமீத் சபர்வால் விமான கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு மேடே அழைப்பை (விமானம் பேராபத்தைச் சந்திக்கும் சமிக்ஞையாகும்) விடுத்துள்ளார்.
இருப்பினும் விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேப்டன் சுமீத் சபர்வாலை தொடர்பு கொள்ள முயன்றபோது, தொடர்பு கிடைக்கவில்லை. அதற்குள் விமானம் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த 241 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் விமானம் வெடித்துச் சிதறி விழுந்த பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரியின் மாணவர்களின் விடுதி பலத்த சேதமடைந்துள்ளது.
முன்னதாக விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்த போது அங்குப் பல மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்தில் 4 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளனர், விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்களைப் பார்க்க வந்த அவர்களது உறவினர்கள் 6 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மருத்துவ மாணவர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அதே சமயம் விபத்து ஏற்பட்ட பகுதியில் விமான பாகங்கள், கட்டட கழிவுகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.