Skip to main content

“அன்புமணியைப் பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் ஏறுகிறது” - ராமதாஸ்

Published on 13/06/2025 | Edited on 13/06/2025

 

Ramadoss says he the founder the leader at pmk

அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து வரும் ராமதாஸ், கட்சி நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி வருகிறார். ஆனால், நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்த்து நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு மட்டுமே இருக்கிறது என்று அன்புமணி கூறி ராமதாஸின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார். 

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் கடந்த 5 ஆம் தேதி ராமதாஸை, அன்புமணி சந்தித்துப் பேசியிருந்தார். அதே சமயம் ராமதாஸ் - அன்புமணியின் இந்த சந்திப்பைத் தொடர்ந்து குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்திருந்தனர். ஆனால், அன்புமணியுடனான பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துள்ளதாகவும், என்னுள் இருக்கின்ற இயற்கையான கோபம் கொஞ்சம் பொங்கி எழுந்து நீயா நானா? பார்த்துடுவோம் என்று அந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், கட்சியில் இன்னும் ஒரு ஆண்டுகள் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? என்றும் நேற்று (12-06-25) தனது ஆதங்கத்தை ராமதாஸ் வெளிப்படுத்தி பேசியிருந்தார். 

இந்த நிலையில், இன்று (13-06-25) தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “2026 தேர்தலுக்குப் பிறகு கொடுத்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சு காற்று வரை இருக்கும் வரை தலைவர் பதவியை அவருக்கு கொடுக்க மாட்டேன். நான் ஒரு நல்ல தந்தையாக, வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். ஆனால், மாநாட்டிற்கு பிறகு நடக்கின்ற செயல்களை பார்க்கும் போது மிக மிக வருத்தமாக இருக்கிறது. இந்த கட்சியில் கொஞ்சம் கூட குறைவு இல்லாமல் எனக்கு ஆதரவு வருகிறது. தேர்தலுக்குப் பிறகு தலைவர் பதவியை கொடுக்கிறேன் என்று சொன்னதற்கு,100க்கு 99% சதவீதம் பேர் கடைசி வரை நான் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்த 1 சதவீதத்தை அவரின் குடும்பத்திற்கு கொடுத்துவிட்டேன். 

அதனால் அவர்களுடைய வார்த்தைக்கு ஏற்ப, அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப, என்னுடைய மூச்சு காற்று வரை இருக்கும் வரை தலைவர் பதவியில் நான் இருப்பேன். என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கல் எந்த பொறுப்புக்கும் அரசியலுக்கும் வரக்கூடாது என்று கட்சி ஆரம்பிக்கும் போது நான் சொன்னேன். ஆனால், அதை என்னால் காப்பாற்ற முடியவில்லை. என் உத்தரவுப்படி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனக்கு மகிழ்ச்சி. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று சொன்னால், அதெல்லாம் பொய் என்று அன்புமணி கூறுவார். தந்தை தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். பா.ம.க சொந்தங்களே என்று சொல்லும் எனக்கு ஏற்படுகின்ற பூரிப்பு, ஆனந்தம் அதை சொல்லி மாளாது. ஆனால், இவரை பார்க்கும் போது அதிர்ச்சி, மனகுமுறல்கள் ஏற்படுகின்றது, பிபி (BP) ஏறுகிறது. இந்த கட்சியை சுயமாக உருவாக்கிய என்னை, மைக்கை வைத்து பேசக்கூடாது என்று சொன்னார். கட்சியின் நிறுவனரையோ இப்படி சொல்கிற அதிகாரத்தை நான் கொடுக்கவில்லை. அதனால், என் மூச்சு காற்று இருக்கும் வரை நான் நிறுவனர், தலைவர்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்