Skip to main content

உங்களை பார்த்து எதிரிகள் தொடை நடுங்கிப் போவார்கள்... தமிழக எம்பிக்களுக்கு நாஞ்சில் சம்பத் செய்தி...

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

 

17வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள், நாடாளுமன்ற மக்களவையில் இன்று மக்களவை உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். அப்போது அனைவரும் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.


 

திமுக எம்பிக்கள் பதவியேற்பின்போது தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க, பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க என்றனர். காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் காமராஜ் வாழ்க, ராஜிவ் காந்தி வாழ்க என்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அனைவரும் உலக தொழிலாளர்கள் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் வாழ்க பெரியார், வாழ்க அம்பேத்கார் என்று பதவி ஏற்றனர். ஐஜேகே பார்வேந்தர் தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க என்றார். அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார், வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., வாழ்க புரட்சித் தலைவி அம்மா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்றார்.

 

Nanjil Sampath


 

இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்துகொண்டார் இலக்கியவாதியும், நடிகருமான நாஞ்சித் சம்பத்.
 

''மதசார்பற்ற கூட்டணியில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று என்ன செய்யப்போகிறார்கள் என்று கேலி பேசியவர்கள் உண்டு. கிண்டல் புரிந்தவர்கள் உண்டு. அறுதிப் பெரும்பான்மையோடு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்ட காரணத்தினால் இவர்கள் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது என்று சபித்தவர்கள் உண்டு. 
 

ஆனால் இன்றைக்கு தமிழினத்தினுடைய மீட்பு வரலாற்றில் இந்த நாள் ஒரு நல்ல நாள். திமுக சார்பில் வெற்றி பெற்றவர்களும், தோழமை கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்றவர்களும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்ததும், தேசிய காப்பு பிரமாணத்தை தமிழில் சொன்னதும் பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க என்று நாடாளுமன்றத்தில் முழங்கியதும் இன்றைக்கு தமிழர்கள் எப்பொழுதும் தனித்துவம் உள்ளவர்கள், எங்களை தவிர்க்கவும் முடியாது, எங்களை தகர்க்கவும் முடியாது என்பதை முதல் நாளிலேயே இன்று முரசு அறைந்ததைப்போலவே அறைந்து நிரூபித்திருக்கிறார்கள். 


 

அதிமுக சார்பில் வாகை சூடிய தம்பி ரவீந்திரநாத் குமாரும் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்தது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. அவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

வாகை சூடி தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என் வாழ்த்துகளை எடுத்துக்கொள்கிற அதே நேரத்தில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால், மிக அழகாக அண்ணா சொல்வார், டெல்லியோடு மோத டெல்லியோடு யுத்தம் செய்ய டெல்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை உடைத்து நொறுக்க திமுக ஒரு படைக்கலனை அனுப்புகிறது என்று சொன்னார். அந்த படைக்கலனாக நீங்கள் மிளிர்வீர்கள். எதிரிகள் தொடை நடுங்கிப் போவார்கள். தமிழினத்தினுடைய உரிமையை மீட்டெடுக்கிற வரலாற்று பயணத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றியை சாதிக்கப்போகிற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாஞ்சில் சம்பத்தின் வாழ்த்துக்கள்''. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முதல்கட்ட வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
First Phase Voting; Preparations are intense

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 950 வேட்பாளர்கள் உள்பட 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரன் ரிஜிஜு, எல். முருகன், ஜிதேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் சஞ்சீவ் பல்யான் என 8 பேர் போட்டியில் உள்ளனர். தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் உள்ளார். மேலும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, தமிழகத்தின் முன்னாள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதே சமயம் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதே போன்று திரிபுரா மாநிலம் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பதற்றமான 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமடைந்துள்ளது.