Skip to main content

'செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்குகிறார்கள்' -பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு!

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

'Tamil Nadu government is creating artificial power shortage' - BJP Annamalai accusation!

 

செயற்கையாக மின் பற்றாக்குறையை திமுக அரசு உருவாக்குவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

 

இன்று (22/4/2022) சட்டப்பேரவையில் தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து  எதிர்க்கட்சியான அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 17,100 மெகாவாட் மின் தேவை இருக்கும்போது 13000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும்போது நிலக்கரி கையிருப்பை அரசு வைத்திருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு தவறிவிட்டது" எனக் குற்றம் சாட்டினார். இந்த மின்வெட்டு காரணமாக சிறு,குறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள், மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பின்னர், இது குறித்து விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின்பற்றாக்குறையைச் சமாளிக்க தனியாரிடமிருந்து 3000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகவும், இந்த ஆட்சியில்தான் இது மாதிரியான நிலைமை ஏற்படுவது மாதிரியான தோற்றத்தை உருவாக்கி பேசுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி ஒதுக்குவதால் அடுத்த இரு மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இந்நிலையில் அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், 'தமிழகத்தில் செயற்கையாக மின் பற்றாக்குறையை திமுக அரசு உருவாக்குகிறது. நாட்டில் போதிய நிலக்கரி இருப்பு இருக்கும் போதிலும் தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக தமிழக அரசு கூறுவது வினோதமானது. 2023 க்குள் தமிழக மக்கள் மின் நிலையத்தை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்