Skip to main content

அதிகாரிகளை உசுப்பிவிட்ட ஸ்டாலின்! சேலத்தை பிடிக்க புதிய ஸ்கெட்ச்!  

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

Stalin has angered the authorities! New sketch to catch Salem!

 

ஆளுங்கட்சியாக ஆனாலும், சட்டமன்றத் தேர்தலில் திமுகவைக் குப்புறக் கவிழ்த்தது சேலம் மாவட்டம். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பிறகு திமுகவில் கோஷ்டிகள் கோலோச்சின. வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தாருக்கும் அரசியலில் பெரிய செல்வாக்கு இல்லை. ஒத்தை எம்.எல்.ஏ.வைக் கொண்டுள்ள சேலம் மாவட்டத்தில் திமுகவை தூக்கி நிறுத்த வியூகம் வகுத்திருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

 

அமைச்சர் கே.என். நேருவிடம் மாவட்ட பொறுப்பு தரப்பட்டுள்ள நிலையில், ராஜேந்திரன் எம்.எல்.ஏ, செல்கவகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரை அமைச்சர் ஒருங்கிணைத்து வேலை வாங்க வேண்டியுள்ளது. இந்நிலையில், 1,242 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழாவுக்காக டிசம்பர் 11இல் சேலம் வந்தார் ஸ்டாலின். கட்சியினர், பொதுமக்கள், நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் என வரவேற்பு அமர்க்களமாக இருந்தது.

 

அதில் உற்சாகமடைந்த முதல்வர், "இது என்ன அரசு விழாவா அல்லது அரசாங்கமே விழாக்கோலம் கொண்டிருக்கிறதா என சந்தேகப்படும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது'' என்றார். முந்தைய ஆட்சி பற்றி அதிகம் விமர்சிக்காமல், லேசாகத் தொட்டுச் சென்ற ஸ்டாலின், சேலத்திற்கும் கலைஞருக்கும் உள்ள தொடர்பு, மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் கட்சிப்பணிகள் ஆகியவற்றை வழக்கம்போல் சிலாகித்துப் பேசிய முதல்வர், விழா ஏற்பாடுகளைக் கவனித்து, கட்சி நிர்வாகத்தையும் சீர்படுத்தும் கே.என். நேருவின் பக்கம் மடையைத் திருப்பினார்.

 

யாருடனும் கூட்டணி இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் சொன்னாலும், அரசு நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பாமக எம்.எல்.ஏ.க்கள். முதல்வரின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாமக எம்.எல்.ஏ. அருள், ''வழக்கமாக கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்டு தீர்வு காணாமல் சென்ற அரசைத்தான் கண்டிருக்கிறோம். சேலம் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதல்வரிடம் கோரிக்கை மனுக்களைக் கொடுத்துள்ளனர். நான் ஒரு ஆயாவைச் சந்தித்தேன். அவர், "ஒரு துண்டுச் சீட்டில் முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தேன். எனக்கும் உதவித் தொகை கிடைச்சுடுச்சு' என்றார். துண்டுச்சீட்டில் கொடுக்கும் மனுவுக்கு கூட உயிர் கொடுக்கும் முதல்வரை வியந்து பார்க்கிறேன். கரோனா ஒழிப்பில் திறம்படச் செயல்பட்ட முதல்வர்; பசுமைக் காவலர், தேனீயைப் போல சுறுசுறுப்பாக வலம்வந்து மக்கள் பணியாற்றுகிறார்'' என புகழ்ந்து தள்ளினார். மற்றொரு பாமக எம்.எல்.ஏ. சதாசிவம், "எப்போது வேண்டுமானாலும் எளிதாக சந்திக்கும் முதல்வராக எளிமையாக இருக்கிறார்'' என்றார்.

 

விழா முடிந்த பிறகு, 5 ரோடு ஜெயரத்னா மண்டபத்தில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜாவின் உருவப்படத்தை முதல்வர் திறந்துவைத்தார். அதையடுத்து, ஆய்வு மாளிகையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆய்வு நடத்தினார்.

 

"திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஏழு மாதங்களில் 6 முறை முதல்வர் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் 10 இடங்களில் திமுக தோல்வி அடைந்துள்ள நிலையில், வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்த இடங்களையும் திமுக வசமாக்க வேண்டும். பிப்ரவரிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளையும், கட்சி நிர்வாகிகளையும் முதல்வர் உசுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார். சேலம் திமுகவில் திருப்பம் ஏற்படுகிறதான்னு பார்ப்போம்'' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

 

 

சார்ந்த செய்திகள்