Skip to main content

ராமதாசுக்கு சில கேள்விகள்... சிவசங்கர்

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

 


குரு நினைவு மண்டப விழாவில் நேற்று பேசிய ராமதாஸ் குருவை திமுக கொலை செய்ய முயற்சித்தது என குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்து கடிதம் எழுதியுள்ளார் அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர்.
 

அதில், ‘டாக்டர் ராமதாஸ் ஓர் கைதேர்ந்த அரசியல்வாதி என, பல காலம் பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்டவர். காரணம், தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி “அறுவடை” செய்வதில் கெட்டிக்காரராக இருந்தார். அவர் சேரும் கூட்டணி தான் வெற்றி பெறும் என சொல்லும் அளவிற்கு ‘கணக்கு’ போட்டு கூட்டணி அமைப்பார். ஆனால் அது ஓர் காலம். கடந்த சில தேர்தல்களாக அவர் அமைக்கும் கூட்டணி தான் ‘தோல்வி கூட்டணி’ ஆக அமைகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெரிந்தும் ‘தோல்விக் கூட்டணியில்’ சேர்ந்தார். இதற்கு காரணமும் ‘அறுவடை’ தான் என பத்திரிக்கைகள், ஊடகங்கள் பேசின. 

 

S. S. Sivasankar


 

பாட்டாளி மக்கள் கட்சி தோற்றது அவர் எதிர்பார்த்தது தான். மத்தியில் கூட்டணி அரசு அமைந்திருக்கிற சூழலில், தன் மகன் அன்புமணி வெற்றி பெற்றிருந்தால் அமைச்சர் ஆகியிருக்கலாம், இப்போது அது நடக்காமல் போய்விட்டதே என்ற விரக்தியில் உள்ளார். விரக்தி மேலிடுகிற போது எந்தக் கட்சி மேலாவது பாய்ந்து, குற்றம் சொல்லி தன் ‘காய்ச்சலை’ தீர்த்துக் கொள்வது வழக்கம். அது போல சந்தர்ப்பத்திற்காக சில மாதங்களாக காத்திருந்தார் ராமதாஸ். நேற்று (17.09.2019) தான் அந்த சந்தர்ப்பம் வாய்த்தது அவருக்கு. மறைந்த சட்டமன்ற உறுப்பினர் குரு அவர்களின் நினைவு மண்டபம் திறப்பு விழா அந்த வாய்ப்பாக அமைந்தது. 
 

வழக்கமாக தான் பேச நினைப்பதை, குருவை பேச வைத்து குளிர் காய்வது ராமதாஸின் வாடிக்கை. இப்போது குரு இல்லாத சூழலில், குரு பெயரை பயன்படுத்தி பா.ம.கவை உயிர்பிக்க நினைக்கிறார். குரு நினைவு மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசும் போது, “இங்கே, இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், அன்புமணி அவர்களும் கோடிட்டுக் காட்டினார்கள். குருவினுடைய வாழும் காலத்திலே அவரை இங்கே வளராமல் செய்வதற்கு, அவரை கொல்ல வேண்டும் என்று முயற்சி செய்தவர்கள் அப்பொழுது ஆண்டவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பெரியவர்கள். அவரை கொல்வதற்கு பல்வேறு சதி திட்டங்களை தீட்டினார்கள். அது வைத்திக்கு தெரியும். அப்படி அந்த திட்டங்களை நிறைவேறாமல் செய்தவர்கள் நானும், ஜி.கே.மணி அவர்களும். அது தெரிந்து நாங்கள் டி.ஜி.பி அலுவலகத்திற்கு உடனடியாக அவரை போக சொல்லி அந்த திட்டம் நிறைவேறாமல் செய்வதற்கு. இல்லை என்றால் குருவை எப்போதோ நாம் இழந்திருப்போம். குருவை கொள்வதற்கு சதி செய்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் என்று பேசியிருக்கிறார்.
 

நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
 

1. தி.மு.க ஆட்சி நடைபெற்றது 2006- 2011 ஆம் ஆண்டு. எட்டு ஆண்டுகள் கழித்து இந்தக் குற்றச்சாட்டை சொல்லும் நோக்கம் என்ன ?
 

2. ஆதாரம் இருந்தால் காவல்துறையில் புகார் கொடுக்கலாமே ?
 

3. குருவை கொல்ல தி.மு.கவினர் திட்டம் தீட்டியிருந்தால் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஏன் தி.மு.க உடன் கூட்டணி வைத்தீர்கள் ?
 

4. குருவை கொல்ல தி.மு.கவினர் திட்டம் தீட்டியிருந்தால், குரு எப்படி தி.மு.க கூட்டணியில் போட்டியிட முன் வந்திருப்பார் ?
 

2011 ஆம் ஆண்டு தி.மு.க – பா.ம.க இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற நேரத்தில் ஜெயங்கொண்டம் தொகுதி தி.மு.கவுக்கு என தி.மு.க பேச்சுவார்த்தை குழு சொல்லி விட்டது. பா.ம.க குழு ஜெயங்கொண்டம் தொகுதி குருவுக்கு வேண்டும் என கேட்டது. ஒரு நாள் பேச்சுவார்த்தை நின்று போனது. பிறகு அன்று கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனிடம் அன்புமணி பேசி, அவர் கழகத் தலைவர் ஸ்டாலினிடம் பேசி ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.கவுக்கு வழங்கப்பட்டது. மறைந்த குரு அவர்கள் அறிவாலயம் சென்று கலைஞரிடத்திலே வாழ்த்து பெற்றார். கலைஞர், அப்போது குருவை தட்டிக் கொடுத்து “ஜெயங்கொண்டத்திலே ஜெயம் கொள்வாய்”, என வாழ்த்தியதை குரு எல்லோரிடத்திலும் பகிர்ந்து கொண்டார். குருவும் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். அந்த குருவை தி.மு.க கொலை செய்ய பார்த்தது என சொல்வது எவ்வளவு பெரிய பாதகம்?
 

ராமதாஸ் ஏன் இப்படி பிதற்ற வேண்டும், காரணம் இருக்கிறது.
 

 குரு மறைவிற்கு பிறகு, பா.ம.கவின் சரிவு துவங்கி விட்டது. குரு உடல்நலம் குன்றி இருந்த நேரத்தில் ராமதாஸோ, அன்புமணியோ உதவவில்லை என்ற குற்றச்சாட்டு வன்னியர் சங்கத்தினராலேயே சொல்லப்பட்டது. அப்போது உதவி இருந்தால், சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று குரு நீண்ட காலம் வாழ்ந்திருப்பார் என்று எதிர்பார்த்தார்கள். அதை குரு அவர்களின் சகோதரியும் தெரிவித்திருந்தார். இந்த சூழலுக்கு பிறகு குரு அவர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு செல்லவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. மிகுந்த மன வருத்தத்திற்கிடையே குரு சிகிச்சை கூட எடுத்துக் கொள்ளாமல் இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது. கடைசி நாட்களில் மருத்துவ உதவி செய்தார் ராமதாஸ். ஆனால் அதை வன்னியர் சங்க இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடு தான் குரு மறைவுற்ற அன்று அன்புமணிக்கு காடுவெட்டி கிராமத்திலும் காட்டப்பட்ட எதிர்ப்பு.


 

 

அடுத்து குரு மறைவிற்கு திரண்ட இளைஞர்கள் கூட்டம் ராமதாஸை மிரள வைத்தது. பிற்காலத்தில் வன்னியர் சங்கம் என்றால் குரு என்ற அடையாளம் ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்து கொண்டார். அதனால் குருவை புதைத்த இடத்தில் நினைவிடம் எழுப்பப்படாமல் அ.தி.மு.க அரசின் ஆதரவோடு தடுத்து விட்டார். முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்க விடாமல் தடுத்தார். குரு நினைவிடத்திற்கு குருவின் மகன், மகளையே செல்ல விடாமல் தடுத்தார்.
 

 வேறு இடத்தில் இப்போது நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. இதை எல்லாம் திசை திருப்பத் தான் இப்போது ‘குருவை கொல்ல முயற்சி’ என ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை சொல்கிறார். அதிலும் குருவுக்காக கூடிய இளைஞர்கள் கூட்டத்தை தக்க வைக்க தான், குருவின் மீது அக்கறையான இந்தப் பேச்சு.


 

 

காடுவெட்டி குரு அவர்களை பல முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல நீதிமன்றங்களுக்கு போலீஸ் வேனில் அலைக்கழித்து, அவர் உடல்நலம் முழுவதும் குன்றி, நோய் வாய்ப்படுவதற்கு அதிமுக ஆட்சிதான் காரணம் என்று ராமதாஸே குற்றம் சுமத்திய காலம் உண்டு. அது தான் உண்மையும். காடுவெட்டி குருவுக்கு அதிமுக ஆட்சியில் நடந்த அராஜகங்களை மறந்துவிட்டு ‘தேர்தல்கால அறுவடைக்காக’ அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அந்தக் கட்சியின் முதலமைச்சர், அமைச்சர்களை எல்லாம் தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து வந்து தடபுடலாக அறுசுவை விருந்தளித்த ராமதாஸ் அவர்கள் திமுக மீது பாய்வதற்கு தேர்தலில் படுதோல்வி அடைந்தது இன்னொரு காரணம்.
 

 திராவிட முன்னேற்றக் கழகம், வன்னியப் பெரு மக்களுக்காக ஆற்றிய தொண்டினை நினைவுகூர்ந்து அச்சமுதாய மக்கள் பெருவாரியாக திமுகவிற்கு வாக்களித்து விட்டார்கள், ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு 39 நாடாளுமன்றத் தொகுதிகளை வழங்கி விட்டார்கள் என்ற எரிச்சலிலும், ராமதாஸ் சுயநலத்திற்கு அரசியலை பயன்படுத்துவதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு உணர்ந்து விட்டார்கள் என்பதால் திசை திருப்பும் அரசியலில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் திமுக மீது பழி போட்டிருக்கிறார். ஒட்டுமொத்தமாக, குரு இறப்பிற்கான வன்னிய இளைஞர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, தி.மு.க மீது பொய் புகார் கூறி சேற்றை அள்ளி இறைக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
 

 இதை திமுக சட்ட ரீதியாக சந்திக்கும்.இவ்வாறு கூறியுள்ளார்.

 

சிவசங்கரின் அறிக்கைக்கு பின்னர் பாமக துணை பொதுச்செயலாளர் வைத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 17.09.2019 அன்று காடுவெட்டியில் ஜெ.குருவின் மணிமண்டப திறப்பு விழா நடைபெற்றது. அதில் ராமதாஸ், திமுகவைப் பற்றி பேசினார். இதற்கு அரியலூர் மாவட்ட வாரிசு அரசியல்வாதி ஒருவர் பதில் கூறியுள்ளார். இருந்தாலும் அவரின் கேள்விக்கு நான் சில கேள்விகளையும் முன்வைக்கிறேன்.
 

ஜெ.குருவை முதன் முதலில் 149 நாட்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது திமுகதான். 2011 -ம் கூட்டணி எப்படி அமைந்தது என்று அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஜெயங்கொண்டம் தொகுதி பாமக-வுக்கு ஒதுக்கப்பட்டு ஜெ.குரு போட்டியிட்டார். ஆனால் கலைஞரே யங்கொண்டம் தொகுதி பாமக-வுக்கு என்று அறிவித்தும் திமுக நிர்வாகிகள் ஒரு சிலர் சரிவர தேர்தல் பணி செய்யவில்லை. அதையும் மீறி குரு வெற்றி பெற்றார்.
 

இவ்வளவு காலம் கழித்து இக்குற்றச்சாட்டை இப்போது ஏன் கூற வேண்டும் என்று வினா எழுப்பியுள்ளார். இவ்வினாவிற்கான பதிலை ராமதாஸ் 2008ம் ஆண்டே கூறிவிட்டார்.
 

குரு மறைந்த பிறகு பல வதந்திகளையும், அவதூறுகளையும் வாரி இறைத்தார்கள். இந்த சூழ்ச்சிகளை உணர்ந்த வன்னியர்கள் இவர்களது குற்றச்சாட்டுகளை இம்மியளவும் ஏற்காமல் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள். இதை சட்டப்படியும் சரி இல்லை எப்படி வேண்டுமானாலும் எதிர்கொள்ள நாங்கள் தயார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.