Skip to main content

“அண்ணாவை விமர்சிக்கும் மேடையில் அமர்ந்து அதிமுகவை அடகு வைத்துவிட்டனர்” - அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

Published on 23/06/2025 | Edited on 23/06/2025

 

Minister SekarBabu criticizes bjp murugan conference madurai

மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நேற்று (22.06.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபம் ஏற்ற வேண்டும், திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளைக் காக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இந்த மாநாநாட்டில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதே போன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான  ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பேசியிருந்தனர். அது தற்போது தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. 

Minister SekarBabu criticizes bjp murugan conference madurai

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர், “கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரமாகக் கூடாது என்பதற்காக அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அறநிலையத்துறை எதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறித்து புத்தகம் வெளியிட உள்ளோம். தமிழ்நாட்டில் 71,000 கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்மந்தம்?. சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் பவன் கல்யாண் போட்டியிட்டு வெல்லட்டும், அதன் பின்னர் வந்து பேசட்டும். அந்த இயக்கம் எப்படி எல்லாம் தன்னை அடிமைப்படுத்தி கொள்கிறது என்பதற்கு இந்த மாநாடு தான் உதாரணம். பா.ஜ.கவினருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது அதிமுக. பா.ஜ.கவிடம் அதிமுக அடகு வைத்துவிட்டது. அறிஞர் அண்ணாவை விமர்சிக்கும் மேடையில் அதிமுகவினர் அமர்ந்தது அவர்களின் அடிமைத்தனத்தை காட்டுகிறது. திராவிடத்தையே ஒழிப்போம் என்று சூளுரைக்கும் எச்.ராஜாவும் அந்த மாநாட்டில் தான் இருந்தார். ஆகவே, மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடுதான். எங்களைப் பொறுத்தவரை அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு. அரசியலையும், ஆன்மீகத்தையும் கலந்து அரசியல் ஆக்காதீர்கள் என்பது தான் எங்களின் முதல்வரின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் நாங்கள் என்றைக்கும் உறுதியாக இருக்கும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்