Skip to main content

“வெட்கித் தலைகுனிந்து கூண்டோடு பதவி விலகியிருக்க வேண்டும்”  - இ.பி.எஸ். கருத்து!

Published on 19/06/2025 | Edited on 19/06/2025

 

 EPS says should have bowed his head and resigned in shame

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்திய சுமார் 69 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்திருந்தனர். விஷச்சாராய விற்பனை மற்றும் கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் மொத்தம் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பான வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து 3 மாதங்களில் இந்த வழக்கை முடிக்க சி.பி.ஐ. தீர்மானித்திருந்தது. இருப்பினும் இந்த சம்பவம் நிகழ்ந்து இன்றோடு (19.06.2025) ஓராண்டு நிறைவுப்பெற்றிருக்கிறது. ஆனாலும் இன்னும் இந்த வழக்கில் முடிவு தெரியவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த இந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை, இன்றைய ஆட்சியாளர்களைத் தவிர. மக்களின் கண்ணீரை, வேதனையை, ஆற்றொண்ணா துயரை துளி கூட உணராதவராகத் தான் இன்றைய முதலமைச்சராக இருக்கிறார்.

முழுக்க முழுக்க தன்னுடைய அரசின் அலட்சியத்தால் மட்டுமல்ல, தன்னுடைய அரசு சொன்ன ஒரு பொய் தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணம் என இந்த முதல்வருக்கு தெரியாதா?. ஒரு நல்ல ஆட்சி என்றால், இந்தக் காட்சியைக் கண்ட போதே வெட்கித் தலைகுனிந்து கூண்டோடு பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால் இவர்களோ, “மக்கள் எக்கேடாய்ப் போனால் என்ன?” என என்று அடுத்த வேளை கமிஷன் கொள்ளையையும், விளம்பரங்களையும் கவனிக்க சென்றுவிட்டனர். கள்ளக்குறிச்சி மக்களைக் கண்ணீரில் மூழ்கடித்த இந்த திமுக அரசை, தமிழக மக்கள் ஜனநாயக ரீதியாக ஓட ஓட விரட்டியடிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்